தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா- 50 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் மொத்தம் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 2,174 பேருக்கு கொரோனா உறுதியானது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக 2,000க்கும் அதிகமானோருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக ரூ.3000 கோடி தேவை.. பிரதமரிடம், எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
576 பேர் பலி
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை மொத்தம் 576 பேர் மரணம் அடைந்துள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 1276 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மொத்தம் 35, 556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று பரிசோதனைகள் அதிகம்
தமிழகத்தில் இன்று மிக அதிகபட்சமாக 25,463 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டன. இதனால் இன்று 2,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 7,37,787 பரிசோதனைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டோரில் 1368 பேர் ஆண்கள்; 805 பேர் பெண்கள்; 3-ம் பாலினத்தவர் இருவர்.
சென்னையில் 1276
மாவட்டங்களில் சென்னையில் மிக அதிகபட்சமாக 1276 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,258. சென்னைக்கு அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 162 பேருக்கு கொரோனா உறுதியானது. அம்மாவட்டத்தில் மொத்தம் 3,105 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. கடலூரில் 63; காஞ்சிபுரத்தில் 61, ராணிப்பேட்டையில் 68; திருவள்ளூரில் 90 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது.
மாவட்டங்களிலும் அதிகரிப்பு
பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டங்களில் நிலவரம்: கோவை-2; தருமபுரி-9; திண்டுக்கல்-15; கள்ளக்குறிச்சி- 16; கன்னியாகுமரி- 7; கரூர்-8; கிருஷ்ணகிரி-3; மதுரை- 27; நாகை- 13; நாமக்கல்- 2; நீலகிரி-5 ; புதுக்கோட்டை- 9; ராமநாதபுரம்- 50; சேலம் -16; சிவகங்கை- 12; தென்காசி- 3; திருப்பத்தூர்-1; திருவண்ணாமலை -47; திருவாரூர்-15; தூத்துக்குடி- 43; திருநெல்வேலி- 11; திருச்சி- 8; வேலூர் 15; விழுப்புரம்- 18; விருதுநகர் 2.