ரூ.4,620 கோடி விபூதி அடித்த ஹிஜாவு.. இயக்குநருக்கு 3வது முறையாக ஜாமீன் மறுத்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது ஹிஜாவு நிதி நிறுவனம். 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில், ஹிஜாவு நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிறுவன இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி தனது கணவர் ரவிச்சந்திரன் பெயரில் ஆர்.எம்.கே. பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி, ஹிஜாவு நிறுவனத்துக்காக முதலீடுகளை ஈர்த்ததாக கடந்த ஏப்ரல் முதல் வாரம் கைது செய்யப்பட்டார்
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த முறை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மீண்டும் மூன்றாவது முறையாக கலைச்செல்வி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே, ஹிஜாவு நிறுவன இயக்குநர் சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications