"இந்தி திணிப்பு"..புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக - வைரமுத்து
சென்னை: தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு தங்களது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்தது.
அதில் இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமித்ஷா
நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவானது 1976-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் லோக்சபா எம்.பி.க்கள் 20 பேர்; ராஜ்யசபா எம்.பிக்கள் 10 பேர் 30 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தி மொழி பயன்பாடு குறித்து ஆய்வு செய்து இந்த அலுவல் மொழி குழு அறிக்கை வழங்கும். தற்போது இந்த குழுவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைவராக உள்ளார்.

பயிற்று மொழி
அமித்ஷா குழு அளித்து உள்ள பரிந்துரைகளில், அனைத்து தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழியாகவும் இதர பயன்பாடுகளுக்கான மொழியாகவும் இருக்க வேண்டும்; ஆங்கில மொழியை பயன்படுத்துவது ஆப்ஷனலாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலத்துக்கு பதில் இந்தி
ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும். தேவைப்பட்டால்தான் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம்; காலப்போக்கில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயிற்று மொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

வைரமுத்து
இந்த நிலையில் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக கவிதை எழுதி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். எங்களை ஆண்ட இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ தங்கள் தாய் மொழியை எங்கள் தலையில் திணித்ததில்லை என்று குறிப்பிட்டுள்ள வைரமுத்து தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரமிக்கவர்களே அன்போடு சொல்கிறேன் புலியைத் தொட்டாலும் தொடுக மொழியைத் தொடாது விடுக என்றும் வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications