3ம் வகுப்பு படிக்கிற.. இந்தியில் கவிதை சொல்லத் தெரியாதா.. சென்னையில் மாணவனை அடித்த ஆசிரியை!
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் பள்ளியில் இந்தி கவிதை சொல்லாததால் 3ஆம் வகுப்பு மாணவரை கடுமையாக தாக்கிய இந்தி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவரை பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று மிரட்டிய அந்த ஆசிரியை ஆத்திரத்துடன் தாக்கிய நிலையில், மாணவரின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இந்தி ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை விடுவிக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. பாஜகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே பாஜக தரப்பில் 3வது மொழி அவசியம், கும்மிடிப்பூண்டி தாண்டினால் இந்தி தேவைப்படும், மற்ற மாநிலங்களில் சாப்பாடு சாப்பிட இந்தி தேவைப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அரசியல் கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்றுக் கொடுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிப்பு குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறிய மாணவரை இந்தி ஆசிரியை கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதனால் அந்த மாணவரின் பெற்றோர் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியை மீதும் புகார் அளித்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் பவன் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பத்மலட்சுமி என்பவர் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் 3வது வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு இந்தி கற்பதிலும், படிப்பதிலும் சில சிக்கல்கள் இருந்திருக்கின்றன.
இந்த சூழலில் 3வது வகுப்பு மாணவரை இந்தியில் கவிதை சொல்லுமாறு பத்மலட்சுமி கூறி இருக்கிறார். அப்போது அந்த மாணவர் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறிய போது, அந்த ஆசிரியை மாணவரை கடுமையாக அடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பள்ளிக்குள் விடமாட்டேன் என்றும் மிரட்டி தொடர்ந்து அடித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த மாணவரின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக இந்தி ஆசிரியை மீது பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தி ஆசிரியை பத்மலட்சுமி சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்த சம்பவம் மக்களிடையே விவாதமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications