"விசிகவை உடனே தடை பண்ணுங்க.." அர்ஜுன் சம்பத் அடுத்த சர்ச்சை! என்ன காரணம் சொல்கிறார் தெரியுமா
சென்னை: காஞ்சிபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், விசிகவை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய வேண்டும் எனத் தடாலடியாகத் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் தலைவராக உள்ளவர் அர்ஜுன் சம்பத். தொடர்ச்சியாக இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட அம்பேத்கர் நினைவு நாளுக்காக இந்து மக்கள் கட்சியினர் ஓட்டிய போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பியது.
டிச.6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளன்று அம்பேத்கரை காவி சட்டை, திருநீறு பட்டை, குங்கும பொட்டு உருவத்துடன் சித்தரித்து இந்து மக்கள் கட்சியினர் சர்ச்சை போஸ்டர்களை ஓட்டி இருந்தனர்.
Exclusive ஸ்டாலினுக்கு கேரள அரசை கேட்க தைரியம் இருக்கா? திருட்டுத்தனம்! சவால் விட்ட அர்ஜூன் சம்பத்!
அர்ஜுன் சம்பத்
கும்பகோணத்தில் சில இடங்களில் இந்து மக்கள் கட்சியினர் இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். இந்த விகாரம் சர்ச்சையான நிலையில், உடனடியாக இந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் போஸ்டர் ஓட்டியதாகக் கூறி, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தின் பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் விசிக குறித்து சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார்.
அபிஷேகம்
ஹரித்துவார் கங்கா மாதா ஆலயத்தில் வைத்து 41 நாட்கள் பூஜை செய்யப்பட்ட ஸ்படிகலிங்கம், காஞ்சிபுரம் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை விழா இந்து மக்கள் கட்சி சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு ஸ்படிக லிங்க அபிஷேகத்தைத் தொடங்கி வைத்தார்.
முதல்வர் உடனடியாக வரணும்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், "தமிழ்நாட்டை இப்போது வலுவான மாண்டஸ் புயல் தாக்க உள்ளது. இந்த நேரத்தில் முதல்வர் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக சென்னை வரவேண்டும். இயற்கை பேரிடரிலிருந்து மக்களைப் பாதுகாக்கக் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
விசிகவை தடை செய்ய வேண்டும்
தடைசெய்யப்பட்ட இயக்கங்களோடு கைகோர்த்து ஆதரித்துப் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை உடனடியாக தடை செய்யப் படவேண்டும். வரும் டிசம்பர் 12ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தடை செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு வழங்கப்படும்" என்று கூறினார். அம்பேத்கர் காவி உடை விவகாரமே சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், நேற்று தனது ஆதரவாளர்களுடன் அம்பேத்கரின் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.
சர்ச்சை
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அர்ஜுன் சம்பத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கவும் அர்ஜுன் சம்பத்தை அவர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் திரும்பிச் சென்றார். இந்த விஷயம் தொடர்பாகப் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் அளித்த புகாரின் அடிப்படையில் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உத்தரவாத கடிதம்
முன்னதாக அம்பேத்கருக்கு காவி சட்டை அணிவிக்கமாட்டேன், விபூதி, குங்குமம் பூசமாட்டேன் என்று அர்ஜுன் சம்பத் சென்னை ஐகோர்ட்டில் உறுதி அளித்திருந்தார். இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இந்த உத்தரவாத கடிதத்தை அளித்த பிறகே , அம்பேத்கரின் மணிமண்டபத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்த அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.