திருச்சியில் ஸ்டேன் சுவாமிக்கு சிலை! சொந்த ஊரில் ஜோராக நடக்கும் ஏற்பாடுகள்! குறுக்கே இந்து முன்னணி
சென்னை: மாவோயிஸ்ட் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையிலேயே மரணம் அடைந்த ஸ்டேன் ஸ்வாமிக்கு அவர் பிறந்த ஊரில் உருவச்சிலை மற்றும் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்தவருக்கு உருவச்சிலை அமைப்பதா? என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திருச்சி மாவட்டம், விரகாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெனிஸ்லாஸ் லூர்துசாமி என்னும் ஸ்டேன்சாமி என்பவர் கத்தோலிக்க அடிப்படைவாத ஜேசூட் பிரிவை சேர்ந்த பாதிரி. இவர் வனவாசிகள் மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கு சேவை செய்வதாகக் கூறி, ஜார்கண்ட் மாநிலத்தில் அமைப்பை நிறுவி அதன் மூலம் வெளிநாட்டு நிதியை பெற்று வந்தவர்.
அந்த நிதியை சிறையில் உள்ள மாவோயிஸ்ட் கைதிகளை வெளிகொண்டுவர பயன்படுத்தியுள்ளார். மேலும் வனவாசிகள் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடையே மாவோயிஸ்ட் சிந்தனையை விதைக்கும் சதிச் செயலைச் செய்த நகர்புற மாவோயிஸ்ட் ஆவார்.

கடந்த 31/12/2017 அன்று எல்கர் பரிஷத் என்ற பெயரில் நகர்புற நக்ஸல்கள் மற்றும் ஸ்டேன் சாமி, புனே அருகேயுள்ள பீமா கரோகானில் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். அதன் விளைவாக அடுத்த தினமே பெரும் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரம், ஸ்டேன் சாமி உள்ளிட்ட நகர்புற நக்ஸல்களான, (1)வரவர ராவ், (2)சுதா பரத்வாஜ், (3)ஆனந்த் டெல்டும்டே, (4)வெர்னான் கான்ஸ்லேவ், (5)அருன் பெரைரா, (6)சோமா சென், (7)கவுதம் நவல்கா, மற்றும் (8)மகேஷ் ராவத் ஆகியோரின் வன்முறையை தூண்டும் பேச்சு மற்றும் மாவோயிஸ்ட் பிரச்சாரத்தால் ஏற்பட்டதை தேசிய புலனாய்வு முகமை கண்டறிந்து மேற்கண்ட அனைவரையும் கைது செய்தது. இவர்களில் கவுதம் நவல்கா இன்னமும் சிறையில் இருக்கிறார்.
மற்றவர்களை கடந்த ஜனவரி மாதம்தான் 8 ஆண்டுகளுக்கும் மேலான சிறை வாசத்துக்கு பிறகு கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய நிபந்தனை ஜாமீனை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த வகையில் அவர்களின் குற்றத்தின் கொடூரத்தை அறிய முடிகிறது. மேற்படி நகர்புற நக்ஸல் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் முன் வைத்த நிலையில், ஸ்டேன்சாமிக்கு வயது முதிர்வு மற்றும் உடல்நிலையைக் காரணம் காட்டியும் இடைக்கால ஜாமீன் கூட வழங்க மறுத்தது நீதிமன்றம். இந்நிலையில் சிறையில் இருக்கும்போதே கொரோனா நோய் தொற்றால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டேன் சாமி மரணமடைந்தார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், இறந்தவர்கள் உடலை எரியூட்டுவதில்லை. அதிலும் அடிப்படைவாத பிரிவான ஜேசூட் பாதிரிகளின் உடலை நிச்சயமாக எரிக்கமாட்டார்கள். ஆனால் நகர்புற மாவோயிஸ்ட்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் ஸ்டேன் சாமி இறப்பை தங்களின் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் உத்தியாக ஸ்டேன்சாமி அஸ்தி என்று கூறி தமிழகமெங்கும் இரங்கல் கூட்டங்களை நடத்தினார்கள். தற்போது ஸ்டேன்சாமியின் பூர்வீக கிராமமான விரகாலூரில் கத்தோலிக்க சர்ச்சில் ஸ்டேன்சாமிக்கு உருவச்சிலையும், நினைவிடமும் அமைக்கபட்டு, அது வரும் ஜூலை 5 ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஸ்டேன் சாமி உள்ளிட்ட 9 பேரும் திட்டமிட்ட கலவரத்தைத் தூண்டியதுடன் தொடர்ந்து மாவோயிஸ்ட் கும்பலுக்கு ஆள் சேர்ப்பதிலும் நிதி சேகரிப்பிலும் மாவோயிஸ்ட் சிந்தனைகளை வனவாசிகள் மற்றும் பட்டியல் சமூகத்தினரிடையே விதைப்பதிலும் ஈடுபட்டு வந்த சதிகாரர்கள். பாரதப்பிரதமர் மோடி அவர்களை படுகொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளது, அவர்களுக்கிடையே நடந்த ஈமெயில் கடிதப் போக்குவரத்து மூலம் தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்துள்ளது.
ஏற்கனவே தமிழக முதல்வர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களை ஆரத்தழுவி விருந்து கொடுத்து உபசரித்த நிலையில், தற்போது பிரதமரை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியவருக்கு உருவச்சிலையும், நினைவிடமும் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது கடும் கண்டனத்திற்குறியது. வ.உ.சி, வாஞ்சிநாதன், பாரதியார் , பசும்பொன் முத்துராமலிங்க தேவர், போன்ற ஏராளமான தேசபக்தர்களை உருவாக்கிய இந்த மண்ணில் வாழ்நாள் முழுவதும் மாவோயிஸ்ட் வன்முறையை விதைத்து, பிரதமர் படுகொலைக்கு திட்டம் தீட்டிய ஸ்டேன்சாமிக்கு நினைவிடம் அமைப்பது இந்த தெய்வீக மண்ணில், தேசியம் வளர்ந்த மண்ணில் மாவோயிச நஞ்சை விதைப்பதாகும்.
எனவே தேசியம் மலர்ந்த, தெய்வீக மலர்ந்த மண்ணில் ஒருபோதும் நஞ்சு விதைக்கப்படுவதை வேடிக்கை பார்க்கக்கூடாது. மாநில அரசு உடனடியாக ஸ்டேன்சாமிக்காக நினைவிடம் அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications