மதுரையில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு! எடப்பாடி பழனிசாமி, சீமானுக்கு இந்து முன்னணி அழைப்பு
சென்னை: மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக செயல் தலைவர் அன்புமணி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோருக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

ஏற்கெனவே ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட்டு விருந்து வைக்க சிலர் முயன்றனர்.
அப்போது அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை திரட்டி இந்து முன்னணி அமைப்பு மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள், முருகன் கோயில்களை சீரமைக்க கோரியும் முருக பக்தர்களை ஒன்று திரட்டவும் இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முருக பக்தர்கள் மாநாட்டை இந்து முன்னணி நடத்துகிறது. இந்த மாநாட்டில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு கேரள மாநிலம் அத்திப்பாடியில் நடந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினிகாந்தை சந்தித்து இந்து முன்னணி அமைப்பினர் அழைப்பிதழ் கொடுத்தனர். அவரும் வருவதாக வாக்களித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக செயல்தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன், நடிகை தேவயானி உள்ளிட்டோருக்கும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.












Click it and Unblock the Notifications