தமிழக அரசுக்கு எதிராக தமிழகமெங்கும் நாளை தெருமுனை பிரச்சாரம்! இந்து முன்னணி அறிவிப்பு!
சென்னை: தமிழக அரசுக்கு எதிராக தமிழகமெங்கும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் நாளை தெருமுனை பிரச்சாரம் நடத்தப்படும் என காடேஸ்வரர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவதாகவும் மக்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோவில்களை சுற்றுலா தலங்களை போல் சித்தரித்து கோவில்களின் புனிதத்தை கெடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

வங்காள தேசத்திலிருந்து வந்துள்ள முஸ்லீம்கள் திருப்பூர், கோவை பகுதிகளில் அதிகளவில் தங்கியிருப்பதாக கூறிய காடேஸ்வரர் சுப்ரமணியம், அவர்கள் கலவரத்தை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தனக்கு தெரிகிறது என்றார். கோவில் வருமானத்தை இந்துசமய அறநிலையத்துறை சரியாக கணக்கு காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்த அவர், இந்துகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை மக்களிடம் தெரியப்படுத்துவதே தங்கள் நோக்கம் என்றார்.
காடேஸ்வரர் சுப்ரமணியம் ஒரு பக்கம் இப்படி கூறும் நிலையில், திமுக ஆட்சி தான் இந்துசமய அறநிலையத்துறையின் பொற்காலம் என அமைச்சர் சேகர்பாபு பல முறை பெருமிதமாக பல மேடைகளில் பேசியிருக்கிறார். ராஜகோபுரங்கள், மகா மண்டபம், மலைப் பாதை சீரமைத்தல், என திருக்கோயில் திட்டப்பணிகளை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து துவக்கி வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டல், திருக்கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளை கண்டறிந்து அளவீடு செய்தல், திருக்கோயில்களின் திருப்பணிகளை பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க செய்தல் என அமைச்சர் சேகர்பாபு ஒரு பக்கம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்தச் சூழலில் இந்து முன்னணி அமைப்பினர் நாளை அரசுக்கு எதிராக தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications