குளியலறையில் ரகசிய கேமரா? தமிழக ஆன்மிக தலங்களில் அந்தரங்க வீடியோ? உடனடி ஆய்வு தேவை: இந்து முன்னணி
சென்னை: தமிழகத்தில் உள்ள அத்துணை ஆன்மிக தலங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் குளியலறைகள், கழிப்பறைகள், உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "தமிழகத்தில் ராமேஸ்வரம், பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், கும்பகோணம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மாதம்தோறும் வருகின்றனர். இது தவிர அந்தந்த கோயில்களுக்கென்று இருக்கின்ற விசேஷங்கள், விழா காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு பெருகும்.

குளியலறை: வரக்கூடிய பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கவும், துன்பங்கள் தீர்ந்து குடும்பத்தில் நல்ல நிலை உருவாக வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள். வரக்கூடிய பக்தர்களில் பெரும்பான்மையானவர்கள் வசதி வாய்ப்பற்ற சாதாரண மக்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு என இந்து சமய அறநிலைத்துறையால் போதுமான அளவில் தங்கும் இடம் மற்றும் குளியலறை, கழிப்பறை, உடை மாற்றும் அறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை.
இதனால் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தனியார்கள் நடத்துகின்ற தங்கும் விடுதிகள், குளியலறை, கழிப்பறை, உடைமாற்றும் அறைகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் பயன்படுத்தும் போது தனி நபர்கள் அந்த அறைகளில் ரகசிய கேமராவை பொருத்தி பெண்களின் படம் எடுக்கும் அவலம் ஏற்படுகிறது.
மேலும் அந்த அந்தரங்க வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது மற்றும் சம்பந்தப்பட்ட பெண்களை இதனை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது.
காவல்துறை: சமீபத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் தீர்த்தமாடி விட்டு தனியார் உடைமாற்றும் அறையில் உடை மாற்றிய பெண்ணைப் படம் பிடித்த நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இது எதோ ஒரு கோவிலில் நடக்கிறது என்று விட்டுவிட முடியாது. இதேபோன்று தமிழகம் முழுவதும் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.
இதனால் ஆலயத்திற்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பும் மற்றும் அவர்களின் கண்ணியத்திற்கு குறைபாடும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் கண்ணியம் எந்த வகையிலும் குறைபாடு ஏற்படாத வகையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை இந்து சமய அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் இருக்கிறது.
ஆன்மீக தலம்: எனவே தமிழகத்தில் உள்ள அத்தனை ஆன்மிக தலங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் குளியலறைகள், கழிப்பறைகள் உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல, பள்ளிகளில் பெற்றோருக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்தும் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ளதாவது :
"தனியார் பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை செய்வது கூடாது. மீறி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 'அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்' என்பது தான், தமிழர்களின் அடிப்படை பண்பாடு. பெற்றோரை போற்றுதல், வணங்குதல் என்பது தமிழர் மரபிலே உள்ள நல்லொழுக்கமாகும்.
பாத பூஜை: யாரெல்லாம் பெற்றோரை போற்றினரோ, அவர்கள் தங்களது வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக மக்களால் போற்றப்படுகின்றனர். பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும். தனியார் பள்ளியில் பெற்றோர், மாணவர் விருப்பத்துடன் தான் பாத பூஜை நடக்கிறது. மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை.
இதுபோன்ற நிகழ்வுகளால், மாணவர் - பெற்றோர் உறவு மேம்படுகிறது. பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் மீதான அன்பும், அக்கறையும் கூடுகிறது என்பதே உண்மை. இத்தகைய நிகழ்வுகள் தவறான செயலாக சித்தரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. நம் பண்பாட்டை சிதைக்கும் வெளிநாட்டு கலாசாரத்தை, பள்ளிகளில் புகுத்துவதை திராவிட மாடல் ஆட்சி ஊக்கப்படுத்துகிறது.
திமுக அரசியல் பிரிவு: மாணவர்களிடம் போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது. பள்ளிகளில் வன்முறை பெருகி வருகிறது. இதற்கு தீர்வாக பண்பாட்டு போதனை வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் வைத்த கோரிக்கையை, நடைமுறைப்படுத்த கல்வித் துறை மறுக்கிறது. தி.மு.க.,வின் அரசியல் பிரிவு போல் செயல்படுவதை, பள்ளிக்கல்வித் துறை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications