நெருப்புடா! நெருங்குடா! தீரன் சின்னமலை வடிவமடா அண்ணாமலை.. ரொம்ப ஓவராகவே பொங்கிய அர்ஜூன் சம்பத்!
சென்னை: ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில், ரஃபேல் வாட்ச் தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுவிட்டது.
அதுவும் ரஃபேல் வாட் வாங்கியது தொடர்பான ரசீதை ஒரு மணிநேரத்தில் வெளியிடுவாரா? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி கேட்க, சொத்து கணக்கையே தருகிறேன் நான் பாதயாத்திரை போகும் நாளில் என அண்ணாமலை பதில் சொல்ல இப்போது திரும்பிய பக்கம் எல்லாம் அதகளம்தான்.

அண்ணாமலை ட்வீட்
அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில், திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் @BJP4TamilNadu தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன் என கூறியிருந்தார்.

விடாது வெளுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி
அண்ணாமலையின் பாதயாத்திரை, சொத்து கணக்கு தொடர்பான பதிலுக்கு மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி தந்துள்ளார். இது தொடர்பான பதிவில், சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான். பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா? தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? என வெளித்தெடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

பாஜகவின் பதிலடி
பாஜகவின் நிர்வாகிகளும் சும்மா இருக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதில் தரும் வகையில், ஒவ்வொரு நாளும் பல நூறு கோடிகளுக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் சரக்குகளுக்கு 'பில்' கொடுக்க துப்பில்லாதவர்கள், கையில் கட்டியிருக்கும் 'வாட்ச்'க்கு பில் கேட்பதா? என சீறியுள்ளார் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

அர்ஜூன் சம்பத்தின் அதகள பதிவு
இந்த அக்கப்போர்களுக்கு மத்தியில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பெயரிலான ட்விட்டர் பதிவு பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது. அர்ஜூன் சம்பத் பெயரிலான அந்த ட்விட்டர் பதிவில், நெருப்புடா! நெருங்குடா பார்ப்போம்! முடியுமா? நெருங்குனா பொசுக்குற கூட்டம்! லஞ்ச,ஊழலுக்கு நெருப்புடா!ஒழுக்கத்தின் உச்சமடா!கடமை வீரனடா! சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில்
தோன்றிய தீரன் சின்னமலை வடிவமடா அண்ணாமலை!நேர்மையின் சின்னம்! தமிழ்தாயின் தலைமகன் பாரதத்தாயின் தவப்புதல்வன் என ரொம்பவே ஓவராக புகழ்ந்து தள்ளப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications