ஜெய்பீம் சர்ச்சைக்கு நடுவே நுழையும் 'இந்துத்துவா'குரல்-சீமானின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா ராமதாஸ்?
சென்னை: ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு இடையே இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என்கிற பிரிவினை பேச்சுகளுடன் இந்துத்துவா போக்கு சொருகப்பட்டு வருகிறது. பாமகவை இந்துத்துவா சித்தாந்தத்துக்கு ஆதரவாக மடைமாற்றும் இந்த போக்கை இருந்து பாமக எப்படி கையாளப் போகிறது? என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வி.
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் வலிந்து அவமானப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது அவர்களது வேதனையின் வெளிப்பாடு. இதனை முதன் முதலில் சுட்டிக்காட்டியவர் கவிஞர் ஜெயபாஸ்கரன்.
கவிஞர் ஜெயபாஸ்கரன் தமது சமூக வலைதளப் பக்கத்தில், இந்தப் படத்தில், பிரகாஷ்ராஜ் அவர்களிடம், 'அந்த உதவி ஆய்வாளர் உள்ளூரில் சாதிச் செல்வாக்கும், அதிகாரபலமும்,பண பலமும் உடையவன்' என்று வசனம் பேசுகிறாரே.. இது எந்த ஊடக நியாயம்? இந்தப் படத்தில், லாக்கப்பில் ஓர் அப்பாவியைப் படுகொலை செய்கிற உதவி ஆய்வாளர், குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று வரையறை செய்து, மறைமுகமாக அதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துகின்ற ஒரு அயோக்கியத்தனம், எதன் பொருட்டு வெளிப்படுத்தப் படுகிறது? மேலும், கடுகளவுகூட அது உண்மையும் அல்லவே! அந்தக் காலக் கட்டத்தில், அப்போது பாதிக்கப்பட்ட அந்த பழங்குடி மக்களுக்காக வாதாடியும், போராடியும் நீதியை நிலை நாட்டியவர்கள், இவர்கள் எந்தச் சமூகத்தை வன்முறைச் சமூகமாகச் சித்தரிக்கிறார்களோ, அந்தச் சமூகத்தின் வழக்கறிஞர்கள் தான் என்றுதானே இப்போது செய்திகள் வெளிவருகின்றன என ஆதங்கப்பட்டிருந்தார்.

அன்புமணியின் கேள்விகள்
இதனைத் தொடர்ந்து பாமக இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி, நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், முதனை கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்ற இளைஞரை கம்மாபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கொடூரமாக அடித்துப் படுகொலை செய்த காவல்துறை சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது தங்களுக்குத் தெரியுமா? இந்த அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் ஜெய்பீம் திரைப்படத்தை உருவாக்கியிருக்க முடியாது. ராஜாக்கண்ணுவைப் படுகொலை செய்த காவல் அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி என்பதை அறிந்திருந்தும் கூட, கொலையான பழங்குடி இளைஞருக்கு ராஜாக்கண்ணு, அவருக்காகப் போராடும் வழக்கறிஞருக்கு சந்துரு, விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜி.க்கு பெருமாள் சாமி என்று உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டிய தாங்களும், இயக்குநரும், சார்பு ஆய்வாளர் பாத்திரத்திற்கு மட்டும் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என பெயரிட்டது ஏன்? நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டிருந்தார்.

சூர்யாவின் பதில்கள்
இதனைத் தொடர்ந்து சூர்யா வெளியிட்ட அறிக்கையில், நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது எடுத்து நடத்திய ஒரு வழக்கில், அதிகாரத்தின் துணையோடு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி நிலைநாட்டப்பட்டது' என்பதே ஜெய் பீம்' திரைப்படத்தின் மையக்கரு. பழங்குடி மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளையும் படத்தில் பேச முயன்றிருக்கிறோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையையும் உடனடியாகத் திருத்தி சரிசெய்யப்பட்டதைத் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன் என அன்புமணிக்கு பதில் கொடுத்திருந்தார். இதன் பின்னர் வன்னியர் சங்கம் சார்பில் ரூ5 கோடி நட்ட ஈடு கோரி சூர்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் இந்த சர்ச்சை இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தீர்வு என்ன?
வன்னியர் சமூகத்தின் வலியை பாமகவினரும் வன்னியர் சமூகத்தினரும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில் சூர்யாவை அடிப்போம்- உதைப்போம் என்கிற தேவையற்ற விதண்டாவாதங்கள், வன்முறைத்தனத்தை நாம் ஏற்கவும் முடியாது. இன்னொரு பக்கம் சூர்யாவும் அவரது ஆதரவு தரப்பும் அதை நீக்கிவிட்டோம்; அதனால் பிரச்சனையை முடித்துவிடுங்கள் என்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ஜெய்பீம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிவிட்டது; வன்னியர் சமூகத்தின் வலியும் நியாயமானது. அத்துடன் பிரச்சனை முடிந்துவிட்டது என கூறியிருக்கிறார்.

ஊடுருவும் இந்துத்துவா
இந்த இருதரப்புக்கு அப்பால் இந்துத்துவா சக்திகள் இதில் குளிர்காயும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றன. இத்திரைப்படம் குறித்த துக்ளக் கட்டுரையில், படக்குழுவினரின் தேவையில்லாத ஹிந்தி எதிர்ப்பு, இடதுசாரி சிந்தனைகள் அவற்றுடன் கலந்திருப்பது துரதிஷ்டமானது என்கிறது. மேலும் ஹிந்து விரோத, ஜாதி, மத மோதலுக்கு வழிவகுக்கும் சினிமாக்கள் சமீபகாலமாக அவ்வப்போது வெளியாகின்றன என்றும், இந்த போக்கை தடுத்து தணிக்கை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்கிறது துக்ளக் கட்டுரை.

எச்.ராஜா கருத்து
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஜெய்பீம் படத்தில் மகாலட்சுமி காலண்டரை வைத்தது ஏன்? இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா? என கேள்வி எழுப்பினார். மேலும் நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா இந்து மக்கள் கோவிலுக்கு போவதை இழிவாக பேசியுள்ளார். நாகூர் தர்காவை பற்றி பேசி இருக்கலாம் வேளாங்கண்ணிக்கு போக வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் அவர்கள் சொல்லவில்லை ஏனென்றால் அது அவர்கள் மதம் என்றும் இந்த பிரச்சனையை மதம் சார்ந்த போக்கில் இழுத்துவிட்டார் எச்.ராஜா. தொலைக்காட்சி விவாதங்களில் பேசுகிறவர்களும் கூட இதனை இந்து-கிறிஸ்தவர் பிரச்சனையாக மடைமாற்றம் செய்யும் வகையில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
Recommended Video

பாமக நிலைப்பாடு என்ன?
பொதுவாக பாஜகவும் அதன் பரிவாரங்களும் இப்படித்தான் பிரச்சனைகளை திசைமாற்றம் செய்து அரசியல் ஆதாயம் அடைவர். இதனைத்தான் பல மாநிலங்களிலும் கையாண்டிருக்கின்றனர். இது தொடர்பாக இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், பாஜக- ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை செயல்படுத்தும் வகையில் பாமக பயன்படுத்தப்படுகிறதா? என்கிற கேள்விக்கு, அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக இல்லாத போல் இந்த கேள்வி ஏன் வருகிறது? டாக்டர் ராமதாஸ் அய்யா அப்படி எல்லாம் செய்யமாட்டார் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஜெய்பீம் பட பிரச்சனையின் மூலம் பாமகவை தங்கள் பக்கம் இழுத்து தக்க வைக்க- அதாவது தமிழகத்தின் மிகப் பெருமான்மை சமூகமான வன்னியர்களை தங்கள் பக்கம் இழுத்து தக்க வைக்க இந்துத்துவா சக்திகள் தீவிரம் காட்டும்- காட்டுகின்றன என்பதுதான் யதார்த்தம். ஆனால் இதனை பாமக எப்படி கையாளப் போகிறது என்பதுதான் இப்போது அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கிற கேள்வி. சீமானின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்?
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications