டெல்லியிருந்து வந்த போன் கால்கள்! ஸ்டாலினுக்கு அமித்ஷா கொடுத்த சர்ப்ரைஸ்! ஆச்சரியத்தில் பாஜகவினர்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காலை முதலே டெல்லியிலிருந்து வரிசையாக போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளன.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் என நாட்டின் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வந்த வாழ்த்து மழையில் நனைந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
பாஜக எதிர்ப்பில் முதல்வர் ஸ்டாலின் மிகத் தீவிரமாக உள்ள நிலையில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தொலைபேசி மூலம் ஸ்டாலினிடம் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

மோடி -அமித்ஷா
முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக அவரை தொடர்புக் கொண்டு, தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தொலைபேசி வாயிலாக ஸ்டாலினை தொடர்புக் கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திரவுபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார். இது தொடர்பான தனது பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஜக்தீப் தன்கர்
இதேபோல் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரும் கடிதம் மூலம் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியிருக்கிறார். இது தொடர்பான தனது கடிதத்தில், எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி
இதனிடையே உடல்நலம் குன்றிய நிலையிலும் முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி தனது பிறந்தநாள் வாழ்த்தை கூறியிருக்கிறார் சோனியா காந்தி. நாட்டின் மிக மிக முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வந்த வாழ்த்துகளால் முதல்வர் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications