மூத்த குடிமக்களுக்கு வீட்டு ரேஷன் திட்டம்! நிதி நெருக்கடியில் கூட்டுறவு சங்கங்கள்.. பின்னணி என்ன?
சென்னை: மூத்த குடிமக்களுக்கான வீட்டு ரேஷன் திட்டம் நிதி நெருக்கடியால் தடுமாற்றத்தில் உள்ளது.. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் கொண்டு சேர்க்கும் இந்தத் திட்டத்திற்கான செலவை அரசு இதுவரை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்காமல் இருக்கிறது.. விரைவில் நிதி வழங்காவிட்டால் அடுத்த மாதம் முதல் திட்டமே நின்றுவிடும் என கூட்டுறவு சங்கங்கள் வேதனை தெரிவிக்கிறதாம். இதுகுறித்த செய்திகளும் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன. உண்மையா?
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன.. வயதானவர்களும் மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் கடைகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று கஷ்டப்படுவதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025 ஆகஸ்டில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 16.73 லட்சம் பேரின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.. இந்தத் திட்டத்திற்கான ஆண்டு செலவாக சுமார் 30.16 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டது..
வாகன வாடகை - கடை பணியாளர்கள்
அந்த மதிப்பீட்டின்படி மலைப் பகுதிகளில் ஒரு அட்டைக்கு 100 ரூபாயும், கிராமப்புறங்களில் 40 ரூபாயும், நகரங்களில் 36 ரூபாயும் வாகன வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது.. கடை பணியாளருக்கு இரண்டு நாட்களுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் திட்டம் தொடங்கியது முதல் இதுவரை இந்த தொகையை அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கவே இல்லையாம்.
கூட்டுறவு சங்கங்கள் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கின்றன.. இந்நிலையிலும் அரசின் உத்தரவை மதித்து தங்கள் பணத்திலேயே இந்தத் திட்டத்தை நடத்தி வருகின்றன.. திட்டம் தொடங்கியது முதல் இதுவரை 10 கோடி ரூபாய்க்கும் மேல் சங்கங்களே செலவு செய்துள்ளன.
மானியம் செலவு எங்கே
அதிகாரிகள் "ஏற்கனவே தரும் மானியத்திலேயே இந்தச் செலவும் சேர்க்கப்படும்" என்று சொல்கிறார்கள்.. ஆனால் அந்த மானியமே முழுமையாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என சங்கங்கள் தெரிவிக்கின்றன.. வாகன வாடகை கட்ட பணம் இல்லாமல் சங்கங்கள் திணறுகின்றனவாம்..
இந்தத் திட்டத்திற்காக செலவு செய்த பணம் திரும்ப வராத நிலையில், அடுத்த மாதம் முதல் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதை தொடர முடியாது என சங்கங்கள் தெளிவாக சொல்கின்றன.. 16.73 லட்சம் பயனாளிகளை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்திற்கு அரசு எப்போது நிதி வழங்கும் என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லையாம்.
நிதி நெருக்கடியில் கூட்டுறவு சங்கங்கள்
தற்போது தமிழகம் முழுவதும் பல கூட்டுறவு சங்கங்கள் இதே பிரச்னையை எதிர்கொள்கின்றன.. ஒரு பக்கம் அரசு திட்டத்தை நடத்த வேண்டும், மறுபக்கம் நிதி வராமல் சொந்த கையிலிருந்து செலவு செய்ய வேண்டும் என இரட்டை நெருக்கடியில் சங்கங்கள் சிக்கியுள்ளன...!!
கூட்டுறவு பண்டக சாலைகளும் ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் இயங்கி வருவதால், இந்த கூடுதல் சுமை தாங்காத நிலையில் உள்ளன.. விரைவில் நிதி வழங்காவிட்டால் சங்கங்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள நேரிடும் என்ற நிலை உருவாகியுள்ளது..!!!












Click it and Unblock the Notifications