சுந்தரேசன் சார் ரொம்ப நல்லவர்.. ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க மாட்டார்.. கான்ஸ்டபிள் செல்வம் வீடியோ
சென்னை: மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், டிஎஸ்பி சுந்தரேசன் உண்மையானவர், நேர்மையானவர், அவர் பொய் பேசமாட்டார் என்று கிண்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் கான்ஸ்டபிள் செல்வம் கூறியுள்ளார். "நான் 12 காவல் அதிகாரிகளிடம் டிரைவராகப் பணிபுரிந்திருக்கிறேன். அவர்கள் எல்லாரிடமும் சுந்தரேசன் சார் வித்தியாசமானவர், லஞ்சமே வாங்கமாட்டார் என்று கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாகப் பணிபுரிந்து வந்தவர் சுந்தரேசன். கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் ஜீப் இல்லாமல் சீருடையுடன் சாலையில் நடந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாகக் கேள்விகள் எழுந்த நிலையில், கள்ள மது விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் தன் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக டிஎஸ்பி சுந்தரேசன் புகார் கூறியிருந்தார்.

டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்
மேலும், "தன் மீது ஆதாரமற்ற புகார்கள் கூறப்படுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது," என்று சுந்தரேசன் கூறியிருந்தார். இதற்கிடையே, டிஎஸ்பி சுந்தரேசன் மீது பல்வேறு புகார்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து, டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
டிஎஸ்பி சுந்தரேசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தஞ்சை சரக டிஐஜி ஜியா உல் ஹக் பரிந்துரை செய்திருந்த நிலையில், பொது ஊழியருக்கான விதிகளை மீறி செயல்பட்டதாக சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக சென்னை கிண்டி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்து வரும் செல்வம் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டராக இருக்கும்போது
கான்ஸ்டபிள் செல்வம் கூறியதாவது: "கிண்டி காவல் நிலையத்தில் இருந்து கான்ஸ்டபிள் செல்வம் பேசுகிறேன். நான் 1997-ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தேன். கடந்த 28 ஆண்டுகளாக தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வருகிறேன். 2009-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை டிஎஸ்பி சுந்தரேசன் ஐயாவுடன் பணிபுரிந்தேன். ஜே5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும்போது அவருக்கு டிரைவராக இருந்தேன்.
நான் கிட்டத்தட்ட 12 காவல் அதிகாரிகளிடம் டிரைவராகப் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், சுந்தரேசன் சார் மிகவும் வித்தியாசமானவர். என் சர்வீஸில் நேர்மையானவர், உண்மையானவர் என்று சொன்னால், சுந்தரேசன் சார் தான். அவர் எனக்கு எந்த சொந்த பந்தமும் கிடையாது. அவரை நேரடியாகப் பலமுறை பார்த்திருக்கிறேன். இப்போது நான் ஏன் சொல்கிறேன் என்றால், காவல்துறையில் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் கிடைப்பது பெரிய விஷயம்.
கையூட்டல் வாங்கியதே கிடையாது
நான் அவருடன் காரில் செல்லும்போது, கடைகளில் நின்று சாப்பாடு வாங்கினால், 500 ரூபாய் கொடுத்து, பணம் கொடுத்து தான் சாப்பாடு வாங்குவார். 'எனக்கு என்ன வேண்டுமோ வாங்கிக்கோ' என்று சொல்வார். மீதி பணத்தைக் கேட்டதே கிடையாது. ஒருவரிடமும் கையூட்டல் வாங்கியதே கிடையாது. நான் பார்த்த வரை, அவர் யாரிடமும் லஞ்சம் வாங்கியது கிடையாது. அவர் பொய்யே பேசமாட்டார்.
உண்மையைப் பேசுபவர்
நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவரை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தார்கள். நேர்மையாக இருப்பதால், உயர் அதிகாரிகளுக்கு வளைந்து கொடுக்கமாட்டார். திறமையானவர், உண்மையானவர். அரசு அவரைக் கவனிக்காவிட்டாலும், கடவுள் கவனிப்பார். 'பணம் வாங்கிவிட்டார்' என்று சொல்லி, அவரைக் கஷ்டப்படுத்திவிட்டார்கள். அதிகாரிகளால் தான் அவர் அடிக்கடி மாற்றப்பட்டார். மன உளைச்சலுக்கு ஆளானார்.
உண்மையைப் பேசுபவர் என்பதால், அவர் உணர்ச்சிவசப்படக் கூடியவர். உண்மையிலேயே நான் அவருடன் பணியில் இருந்திருந்தால், அவர் பேட்டி கொடுக்கும்போது நானும் சேர்ந்து சொல்லியிருப்பேன். அவர் கூறியதில் பொய்யே இருக்காது. அவர் மன ஆதங்கத்தைச் சொல்கிறார். என் மனதில் பட்டதை கூறியுள்ளேன்," என்றார்.












Click it and Unblock the Notifications