சென்னையில் ஒரு செல்போன் டவரையே காணோம்.. புகார் தந்த நிறுவனம்.. விசாரித்து பார்த்தால் ஷாக்
வாடகை பணம் தராததால் செல்போன் டவரை காயலான் கடைக்கு விற்ற வீட்டு உரிமையாளர்கள்.
சென்னை: சென்னையில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டு போலீஸாருக்கே தலைசுற்றிக் கொண்டிருக்கிறது. இதுவரை எத்தனையோ கேஸ்களை பார்த்த போலீஸாரே, இந்த கேஸை எப்படி டீல் செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
ஆம்.. தங்களுக்கு செல்போன் நிறுவனம் சரியாக வாடகை பணம் தராததால் அவர்கள் வைத்த பல அடி உயரமுள்ள செல்போன் டவரை காயலான் கடைக்கு போட்டுள்ளனர் வீட்டு உரிமையாளர்கள்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த செல்போன் நிறுவனம் போலீஸாருக்கு புகார் தெரிவிக்க, வீட்டு உரிமையாளர்கள் பதிலை கேட்டு போலீஸாரே வாயடைத்து போயிருக்கிறார்கள்.

கட்டிட கொம்புகளாகும் "செல்போன் டவர்"
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் அதிக அளவில் செல்போன் டவர்கள் இருப்பதை பார்த்திருப்போம். அதில் சில டவர்கள் சில கட்டிடங்கள் அல்லது வீடுகளின் மீது அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு கட்டிடங்களுக்கு மீது செல்போன் டவர்களை அமைப்பதற்கு அந்த கட்டிட உரிமையாளருக்கு சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக செலுத்தும். பல நூறு அடி உயருமும், ஆயிரக்கணக்கான எடையும் கொண்ட பொருளை அமைப்பதால் அதனால் நிச்சயம் அந்தக் கட்டிடத்துக்கு சேதம் இருக்கும். இதனை ஈடுகட்டுவதற்காகவே இவ்வாறு வாடகை கட்டணத்தை செல்போன் நிறுவனங்கள் செலுத்துகின்றன.

வாடகை செலுத்தவில்லை
அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள வடக்கு மாட வீதியில் இருக்கும் ஒரு வீட்டின் மாடியில் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. இதற்காக மாதா மாதம் அந்த வீட்டு உரிமையாளர்களான கருணாகரன், சந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு செல்போன் நிறுவனம் வாடகை பணத்தை செலுத்தி வந்தது. இதனிடையே, கடந்த 4 ஆண்டுகளாக அந்த செல்போன் நிறுவனம் மூடப்பட்டு இருந்ததால், வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை பணம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

போலீஸில் புகார்
இந்த சூழலில், சம்பந்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த டவரை பார்ப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்ற அந்த நிறுவத்தின் மேலாளர் அதிர்ச்சியில் உறைந்தார். ஏனெனில், அந்த இடத்தில் பல நூறு அடியில் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்த செல்போன் டவரே காணாமல் போயிருந்தது. இதையடுத்து, இதுகுறித்து அவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காயலான் கடை
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், இதுதொடர்பாக வீட்டு உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், 4 ஆண்டுகளாக தங்களுக்கு வாடகை பணம் வராததாலும், செல்போன் டவர் துருப்பிடித்து சேதமடைந்து வந்ததாலும் அதனை காயலான் கடைக்கு போட்டுவிட்டதாக அவர்கள் கூறினர். இதனை கேட்டு போலீஸாரும், செல்போன் நிறுவன மேலாளரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செல்போன் டவரின் மதிப்பு ரூ.8 லட்சத்துக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் போலீஸார் குழப்பத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications