சென்னையில் ஜூம் ஆப் மூலம் காரை நூதனமாக திருடிய கும்பல்.. கையும் களவுமாக பிடித்த போலீஸ்
சென்னை: சென்னையில் ஜூம் ஆப் மூலம் புக் செய்து நூதனமாக காரை திருடிச் சென்றவர்களை தூத்துக்குடியில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஜூம் ஆப் மூலம் காரை எப்படி திருடினார்கள் என்பதையும், சிக்கியது எப்படி என்பதையும் இப்போது பார்ப்போம்.
தற்போதைய நிலையில் காரை திருடி விட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பது எளிதான விஷயம் அல்ல.. ஏனெனில் காரின் நம்பர், பாஸ்டேக், ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி காட்சிகள் போன்றவை காரணமாக காரை யார் திருடினாலும் எளிதாக மாட்டிக் கொள்வார்கள்.

அதையும் மீறி, காரை திருட வித்தியாசமான பல்வேறு யுக்திகளை சில திருடர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படியான ஒரு யுக்தியில் திருடப்பட்ட காரை, அதன் உரிமையாளர் உஷார் ஆனதால் போலீசிடம் சொல்லி, உடனே மீட்டுள்ளார்.
சென்னையில் கருப்பசாமி (26), காளிமுத்து (31) ஆகிய இரண்டு பேர் காரை நூதனமான முறையில் திருட முடிவு செய்துள்ளனர். அதற்காக அவர்கள் ஒரு காரின் உரிமையாளரை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு ஜூம் ஆப் மூலம் காரை புக் செய்தனர்.
புக் செய்த காரை வாங்கிய பின்னர், காளிமுத்துவும் கருப்பசாமியும் ஓட்டிச் சென்றனர். கொஞ்ச தூரத்தில் ஜிபிஎஸ்ஸை ஆப் செய்துள்ளனர். பின்னர் காரில் இருந்து ஃபாஸ்டேக்கையும் கிழித்துவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து காரில் வித்தியாசமான செயல்களை செய்ததால், இவர்கள் மீது காரின் உரிமையாளர் சந்தேகம் அடைந்தார். உடனே உஷார் அடைந்து, போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக காரின் நம்பர் மற்றும் காரை புக் செய்தவர்கள் எங்கு காரை ஓட்டிச் சென்றார்கள் என்று விசாரணையில் இறங்கினர். அவர்கள் தூத்துக்குடியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தூத்துக்குடியில் வைத்து கருப்பசாமி, காளிமுத்து ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வேறுயாரிடமும் இதுபோல் மோசடியில் ஈடுபட்டார்களா என்றும் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications