ஜெயலலிதா: அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம், அரசியல் ரீதியாக ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா?
சென்னை: ஜெயலலிதா உடல்நிலை பற்றி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அளித்துள்ள வாக்குமூலம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் கடந்த 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார்.
இந்த நிலையில் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவிலுள்ள பலரும் கருத்து கூற ஆரம்பித்தனர். சசிகலா மற்றும் அவரை சார்ந்தோருக்கு எதிராக இந்த விவகாரம் பெருமளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது.
இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 150க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கமளித்தனர்.

தாமதமான விசாரணை
அதேநேரம், மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குநர் பரிந்துரையின்படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம், அப்பல்லோ மருத்துவரான, பாபு மனோகர் வாக்குமூலம் அளித்தார்.

மருத்துவர் வாக்குமூலம்
அதில், 2016ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கும் நாளுக்கு முன்னதாகவே தலைசுற்றல், மயக்கம் இருந்தது என்று கூறியுள்ளார். ஓய்வெடுக்க தான் வற்புறுத்தியும், தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாகவும், யாருடைய துணையும் இல்லாமல் நடக்கவே ஜெயலலிதா சிரமப்பட்டதாகவும், மருத்துவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

முக்கியமான வாக்குமூலம்
மருத்துவர் அளித்துள்ள இந்த வாக்குமூலம் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை விவரத்தை மறைத்து விட்டதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் நீண்ட காலமாகவே ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்ற தகவலை மருத்துவர் கூறியிருப்பது சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தோர் மீது சிலர் எழுப்பிய சந்தேக கணைகளை செயலிழக்க வைப்பதாக இருக்கிறது.

டிடிவி தினகரன் பேட்டி
டிடிவி தினகரன் இன்று அளித்த பேட்டியில் இந்த விஷயத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக தான் பழி போடப்பட்டது. தற்போது அதில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்கிறது என்று தெரிவித்து இருந்தார் அவர்.

ஜெயலலிதா உடல்நிலை
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே ஜெயலலிதா உடலளவில் மிகவும் நலிந்து காணப்பட்டார். சட்ட சபைக்கு வருகை தரும் போது நீண்ட நேரம் எழுந்து நின்று பேச முடியாமல் தடுமாறினார் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜெயலலிதா பலவீனமாக இருப்பது தொண்டர்களுக்கு தெரிந்தால் அது கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்பதால் இந்த விஷயத்தை பகிரங்கப் படுத்த வில்லை என்பதுதான் எதார்த்தம் என்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள். இந்த நிலையில்தான் மேலும் மேலும் ஜெயலலிதா உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கும் நிலைமை அவருக்கு ஏற்பட்டது என்கிறார்கள் இந்த விஷயத்தை தொடர்ந்து கவனித்து வருபவர்கள்.

அரசியல்
ஆங்கில இதழ் ஒன்றுக்கு சசிகலா சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூட உடல்நலக்குறைவால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டு இருந்தார் என்ற போதிலும் அவர் சென்னையிலேயே சிகிச்சை பெறுவதுதான் விரும்பினார் என்று தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவின் அப்போதைய உடல்நிலை, மருத்துவர் கூறிய வாக்குமூலம் என பல்வேறு விஷயங்களையும் வைத்து பார்க்கும்போது சசிகலா மற்றும் அவரது தரப்பினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வலுவிழந்து வருவதாக தெரிகிறது. மீண்டும் அதிமுகவிற்கு சசிகலா வர வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில் இதுபோன்ற வாக்குமூலம் வெளியாகி இருப்பது அரசியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications