கைது செய்யப்பட்டது உண்மை குற்றவாளிகளா? ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது எப்படி.. சகோதரர் திடுக் தகவல்
சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் வீட்டு முன்பே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை எப்படி நடந்து என்பது பற்றி அவரது சகோதரர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பெரம்பூரில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலையை நேரில் பார்த்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர், கொலை எப்படி நடந்தது என்பது பற்றியும், கொலைகாரர்கள் பற்றியும் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
ஒரு 7 மணி இருக்கும். நான் கோவிலில் இருந்தேன். அப்போது திடீரென தெருவில் இருந்து சத்தமாக கேட்டது. நான் முதலில் வேற எதோ சத்தம் கேட்கிறது என்று நினைத்தேன். ஆனால் அடுத்த நொடியே அண்ணா ஓடி வாங்கனா.. உங்க தம்பியை வெட்டுறாங்க.. உங்க தம்பியை வெட்டுறாங்க.. ஆம்ஸ்ட்ராங்கை வெட்டுறாங்கன்னா என சத்தம் கேட்டதும், உடனே வேகமாக ஓடினேன்.
ஏய்.. ஏய் என சத்தம் போட்டுக்கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி ஓடினேன். அப்போது கத்தி அரிவாள்களோடு 3 பேர் என்னை நோக்கி ஓடி வந்தாங்க.. முதலில் வந்த நபர் அரிவாளால் என்னை வெட்ட முயற்சித்தார். நான் குணிந்துவிட்டேன். மிஸ் ஆகிட்டு. இரண்டாவது நபர் வெட்டும் போதும் தப்பித்துவிட்டேன். அப்போது நான் வேட்டி தட்டி கீழே விழுந்துட்டேன். அப்போது 3வது நபர் என்னை அரிவாளால் தலையில் வெட்டினார்.
இன்னொருவர் என் முதுகில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். எனக்கும் ரத்தம் வருது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஆம்ஸ்ட்ராங்கை பிடித்து. எப்பா எழுந்துருப்பா.. எழுந்துருப்பா.. என்று பேசினேன். ஆனால் அவர் உம்.. உம்.. என்று தான் சத்தம் கொடுத்தார். ரத்தம் அதிகமாக வந்துகொண்டிருந்தது. அதன்பிறகு நானும் மயங்கிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் தானா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், "நான் எங்கே பார்த்தேன்.. அவர்கள் முகம் எதுவும் ஞாபகம் இல்லை. கத்தி அரிவாள்கள் தான் என் கண்ணுக்கு தெரிந்தது. அவர்கள் என்ன உடை அணிந்து இருந்தார்கள் என்று கூட பார்க்கவில்லை. ஞாபகத்துக்கு வரவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம் ஆம்ஸ்ட்ராங்கை பார்க்க வேண்டும் என்று தான் இருந்தது. 10 செகண்டிற்குள் இது எல்லாம் நடந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications