3 ‘மேட்டர்’ புரிஞ்சா பாஜக பிளான் புரியும்.. தோற்றாலும் ஆளுங்கட்சி.. புட்டுப் புட்டு வைத்த ஸ்டாலின்!
3 சொற்களுக்கான பொருளைப் புரிந்துகொண்டாலே, பாஜகவின் தேர்தல் வெற்றிகளைப் புரிந்துகொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றது திப்ரா மோத்தா கட்சி காங்கிரஸ் - இடதுசாரிகள் வாக்குகளைப் பிரித்ததால் தான் எனத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 'உங்களில் ஒருவன்' என தொடர் பேட்டி அளித்து வருகிறார். இந்தப் பேட்டியின்போது வட கிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் பற்றியும், பாஜகவின் அரசியக் பிளான்கள் பற்றியும் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
திட்டமிட்டு பரப்பப்படும் போலிச் செய்திகள், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது உள்ளிட்ட பொதுமக்களின் கேள்விகளுக்கு 'உங்களில் ஒருவன் பதில்கள்' தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

சிதறிய வாக்குகள் - கூட்டணியால் வென்ற பாஜக
வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "தேர்தல் வியூகங்களின் மூலமாக வெற்றி பெற்றுள்ளது பாஜக. திரிபுராவில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை திப்ரா மோத்தா கட்சி பிரித்துவிட்டதன் காரணமாக காங்கிரஸ் - இடதுசாரிகள் அணி தோல்வியைத் தழுவி பாஜகவை வெற்றி பெற வைத்துவிட்டார்கள். நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக வெற்றி பெற்றிருக்கிறார்கள். கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்காது.

ரெண்டே ரெண்டு
திரிபுரா, நாகாலாந்து பற்றிப் பேசுகிறவர்கள் ஏன் மேகாலயா பற்றி பேசுவது இல்லை? அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற மொத்த தொகுதிகள் 59. இந்த 59 தொகுதியிலும் போட்டியிட்ட பாஜக இரண்டே இரண்டு இடங்களில்தான் வென்றது. பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் கட்சிக்குத் தனது ஆதரவை வழங்கியதன் மூலமாக ஆளும்கட்சியாக தன்னை மேகாலயாவில் காட்டிக் கொள்கிறது பாஜக.

சோசியல் என்ஜினியரிங் - 3 விஷயங்கள்
இந்த மாதிரியான பிம்பங்களைக் கட்டமைத்து, தாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதைபோல காட்டி கொள்கிறது பாஜக. Polarisation, Social Engineering, Media Management - இந்தச் சொற்களுக்கான பொருளைப் புரிந்துகொண்டாலே, பாஜகவின் தேர்தல் வெற்றிகளைப் புரிந்துகொள்ளலாம்." என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவசியம்
தொடர்ச்சியாக, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். சமீபத்தில் நடந்த தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தின்போதும், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும், காங்கிரஸ் அல்லாத அணி கரை சேராது எனப் பேசியிருந்தார் ஸ்டாலின். பாஜக திரிபுராவில் வென்றதற்கு கூட்டணி பலமே காரணம் என்றும், திப்ரா மோத்தா கட்சி வாக்குகளைப் பிரித்ததால் காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்தது பற்றியும் தெரிவித்து, மீண்டும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications