துணை பொதுச்செயலாளர் +கள்ளக்குறிச்சி வேட்பாளர்! "லாட்டரி" அதிபரின் மருமகன் ஆதவ் விசிக வந்தது எப்படி?
சென்னை: நேற்று அம்பேத்கர் திடலில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவருக்கு எப்படி கட்சியில் இவ்வளவு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது? ஏன் வழங்கப்பட்டது? என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கூடைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் ஆதவ் அர்ஜூன் பணியாற்றி வருகிறார். திடீர் திருப்பமாக விசிக கட்சியின் துணை பொதுச்செயலாளராக நியமனம். லாட்டரி அதிபர் மார்டினின் சொந்த மருமகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லாட்டரி அதிபர் மார்டின் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நெருக்கம். ஆட்சிக்கு வந்த தொடக்கத்திலேயே முதல்வர் ஸ்டாலினை கூட லாட்டரி அதிபர் மார்டின் நேரில் சந்தித்து இருந்தார். அப்போது மீண்டும் லாட்டரி விற்பனை தமிழ்நாட்டில் வருமோ என்ற கேள்விகள் இருந்தன.
இப்படிப்பட்ட நிலையில்தான் அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுன் விசிகவிற்கு கொஞ்சம் நெருக்கமாக இருந்தார். கட்சியில் நேரடியாக உறுப்பினராக சேர்ந்தது என்னவோ சமீபத்தில்தான்.
கடந்த சில வாரங்களுக்கு முன் திருச்சியில் விசிகவின் 'வெல்லும் சனநாயகம்' மாநாடு நடந்தது. அதில்தான் இவர் விசிக உறுப்பினர் ஆனார். அர்ஜுனா தலைமையிலான Voice of Common குழுவினர்தான் இந்த உறுப்பினர் சேர்க்கையை முன்னின்று நடத்தியது. அவர்களின் குழுதான் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கான.. இணைய சேவைகளை வழங்கியது.
நெருக்கம்: அந்த நிகழ்வில் அர்ஜுன் தலைமையிலான Voice of Common குழுவினர் திருமா உடன் நெருக்கமாக இருந்தனர். திருமா அர்ஜுன் உடன் அடிக்கடி தனியாக பேசியபடி இருந்தார். அர்ஜுனை மேடையிலேயே இரண்டு மூன்று முறை திருமா பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
நிதி உதவி: விசிக கட்சிக்கு பெரிதாக நிதி உதவிகள் கிடைப்பது இல்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அர்ஜுன் இந்த நிதி உதவிகளை பெற்று கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக தேர்தலுக்கு நிதிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை இவர் கவனிக்க போகிறார். இவர் பணக்கார பின்னணியில் இருந்து வந்தால்.. கட்சிக்கு எளிதாக நிதி பெற்றுக்கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
நேற்று பொறுப்பு: இந்த நிலையில்தான் நேற்று அம்பேத்கர் திடலில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டதோடு இல்லாமல் கள்ளக்குறிச்சி தொகுதி சார்பாக போட்டியிடும் வாய்ப்புகளும் உள்ளதாம். விசிக சார்பாக இரண்டு பேர் இந்த முறை களமிறக்கப்படலாம். ஒன்று திருமா. இன்னொருவர் ரவிக்குமார் அல்லது ஆதவ் அர்ஜுன்.
இதில் ரவிக்குமாருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட சான்ஸ் குறைவு என்கிறார்கள். அதன்படி இரண்டு இடங்கள் மட்டும் கிடைத்தால் ஆதவ் நிற்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். மூன்றாவதாக திமுக கூடுதல் இடம் கொடுத்தால்.. திமுக சின்னத்தில் ரவிக்குமார் நிற்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆதவ் பெரும்பாலும் விசிகவின் பானை சின்னத்திலேயே நிற்பார். அதேபோல் திருமாவும் பானை சின்னத்திலேயே நிற்பார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியில் நீண்ட கால உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் இப்போது திடீரென ஆதவ் அர்ஜுன் துணை பொதுச்செயலாளர் ஆகி இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications