ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட 50 லட்சம் கூலி.. அதிமுக பெண் வழக்கறிஞர் மலர்கொடி சிக்கியது எப்படி?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட 50 லட்சம் ரூபாய் கொடுத்த அதிமுக பெண் வழக்கறிஞர் மலர்கொடி சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதாகும் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக பெரிய அளவில் வீடு கட்டி வந்தார். இதனால், அவர் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். தினமும் இரவு பெரம்பூரில் தான் கட்டும் புதிய வீட்டின் அருகே நண்பர்கள், கட்சிக்காரர்களுடன் பேசிக்கொண்டிருப்பது வழக்கமாம்.

அதுபோல, கடந்த ஜூலை 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் அவர் அவரது சகோதரர் வீரமணி, நண்பர் பாலாஜி, டிரைவர் அப்துல்கனி ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அங்கு நடந்த காங்கிரீட் வேலைகளை பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் 6 பேர் அங்கு வந்தார்கள். அவர்கள் கையில் பட்டா கத்திகள் இருந்தன. வாகனத்தில் இருந்து இறங்கிய அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கி கொலை செய்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை அன்று இரவு முழுவதும் சல்லடை போட்டு போலீஸார் தேடினர். போலீசாரின் தீவிர வாகன சோதனையால், ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடியை சேர்ந்த 39 வயதாகும் பொன்னை பாலு , சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமி நகர் 3-வது தெருவை சேர்ந்த 45 வயதாகும் திருமலை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த 26 வயதாகும் மணிவண்ணன், குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), அருள் (33), செல்வராஜ் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் குன்றத்துரைச் சேர்ந்த திருவேங்கடம் போலீசாரை தாக்க முயன்று தப்பி ஓட முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் 11 குற்றவாளிகளிடம் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வந்தார்கள். அதில் பணப்பரிமாற்றம் ஏதும் நடந்துள்ளதா என்று வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, அவர்களில் ஒருவரது வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் அண்மையில் டெபாசிட் செய்யப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். அந்த பணம் பிரபல வழக்கறிஞரிடம் ஜூனியர் வழக்கறிஞராக உள்ள மலர்கொடி என்பவர் மூலம் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த விஷயத்தில் அதிமுகவைச் சேர்ந்தவரான மலர்கொடிக்கு உதவிய ஜூனியர் வழக்கறிஞர் ஹரிஹரனை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தார்கள். இவர்களுக்கு உதவியாக இருந்ததாக திமுக இலக்கிய அணி பிரமுகரான சதீஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்..
இதையடுத்து ஹரிகரன், மலர்கொடி, சதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதிமுக மேடைப்பாடகரான தோட்டம் சேகரின் மனைவி தான் மலர்கொடி. சேகரின் கொலைக்கு பழிக்கு பழியாக ரவுடி மயிலை சிவக்குமாரை, மலர்கொடியின் மகன் அழகுராஜா தீர்த்து கட்டியதாகவும், அவர் சிறையில் இருந்தவாரே நெட்வார்க்கை விரிவுபடுத்தியதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி பிரபல வழக்கறிஞரிடம் ஜூனியர் வழக்கறிஞராக இருந்த மலர்கொடிக்கு ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் சிறையில் இருக்கும் பிரபல ரவுடிகளின் ஆட்கள் மூலம் அவருக்கு பெரும் தொகை கைமாறியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளை ஒருங்கிணைத்ததாக பாஜகவைச் சேர்ந்த அஞ்சலை என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவத்தில் பல கோடி ரூபாய் கைமாறி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய மிகப்பெரிய குரூப் இதன் பின்னணியில் உள்ளதாகவும் புகார்கள் உள்ளது.












Click it and Unblock the Notifications