நட்டாவிற்கு நெருக்கம்.. 7 மாதமாக போடப்பட்ட பிளான்.. எல்.முருகன் எழுச்சி.. பாஜக தலைவரானது எப்படி?
தமிழக பாஜக தலைவராக வழக்கறிஞர் எல். முருகன் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: தமிழக பாஜக தலைவராக வழக்கறிஞர் எல். முருகன் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் தமிழக பாஜக தலைமைக்கு வெற்றிடம் வந்தது. புதிய தலைவர் பதவியை தேர்வு செய்ய தீவிரமாக ஆலோசனைகள் நடந்தது.
பாஜக மூத்த தலைவர்கள் எச். ராஜா, வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த தலைவர் பதவிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிரடி திருப்பமாக வழக்கறிஞர் எல். முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .
தலைவர் எப்படி
தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் இவர், 20 வருடங்களாக பாஜகவில் இருக்கிறார். அதேபோல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் 22 வருடங்களாக இருக்கிறார். மற்ற பாஜக தலைவர்களை போல இவருடைய அரசியலும் நாமக்கல்லில் ஆர்எஸ்எஸ் சாகாவில் இருந்துதான் துவங்கியது. அருந்ததியினர் சமூகத்தை சேர்ந்த இவர் பாஜகவின் எஸ்சி பிரிவு தேசிய செயலாளராக உள்ளார்.
நட்டாவிற்கு நெருக்கம்
இவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விட, பாஜகவின் புதிய தேசிய தலைவர் நட்டாவிற்கு மிகவும் நெருக்கம் என்கிறார்கள். நட்டாவை இந்த மாத தொடக்கத்தில்தான் எல். முருகன் சந்தித்து பேசி உள்ளார். கடந்த மாதம் இரண்டு முறை நட்டா மற்றும் எல். முருகன் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள். இந்த சந்திப்பில்தான் எல். முருகனுக்கு தலைவர் பதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது என்கிறார்கள்.
லிஸ்ட் இல்லை
இதற்காக தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் கடந்த மாதம் ஒரு லிஸ்ட் ஒன்றை டெல்லி பாஜகவிற்கு அனுப்பி இருந்தார். தமிழக பாஜக தலைவராக வர தகுதி உள்ள நபர்களின் பெயர்களை இதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த லிஸ்டில் எல். முருகன் பெயர் இடம்பெறவில்லை என்று கூறுகிறார்கள். மாறாக எல். முருகனுக்கு வேறு ஒருவர் தமிழகத்தில் இருந்து தீவிரமாக சப்போர்ட் செய்துள்ளார்.
தமிழகம் எப்படி
தமிழகத்தில் முக்கிய பாஜக பிரதிநிதி ஒருவரும், தேசிய அரசியலில் தீவிரமாக இருக்கும் ஒருவரும்தான் எல். முருகனுக்கு தீவிரமாக சிபாரிசு செய்து இருக்கிறார்கள். அவர்கள் ஏற்பட்ட நட்புதான் எல். முருகன் தலைவர் பதவி ஏற்க காரணம் என்கிறார்கள். தமிழக பாஜகவில் இருக்கும் சிலருக்கு எல். முருகன் இப்படி தலைவர் ஆனது பிடிக்கவில்லை என்கிறார்கள். எல். முருகன் சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரள மாநில பொறுப்பாளர்
இவர் பாஜக கட்சியின் கேரள மாநில பாஜக பொறுப்பாளராக சில மாதங்கள் இருந்தார். இவரின் மேற்பார்வையில்தான் கேரளாவில் சபரிமலை போராட்டங்கள் திட்டமிடப்பட்டது. அப்போதுதான் கேரளாவில் பாஜக பெரிய அளவில் கால் பதித்தது. சபரிமலை போராட்டத்தில் கேரள பாஜக தலைவர்கள் கைதி செய்யப்பட்ட போது, அங்கு போராட்டங்களை பின்னின்று நடத்தியவர்தான் எல். முருகன் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
செம
இவரின் செயல்பாடுகள் பிடித்து போய், அதன்பின்தான் இவரை தலைவர் பதவிக்கு ஆலோசனை செய்து இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் இவர் நிறைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருக்கிறார். ஜாதி மாறிய காதலுக்கும், திருமணத்திற்கும் எதிராகவே இவர் பேசி உள்ளார். இவரின் மூலம் இடைநிலை ஜாதி வாக்குகள், தலித் வாக்குகள் இரண்டையும் கவர முடியும் என்று பாஜக நம்புகிறது. அதுதான் இந்த முடிவிற்கு காரணம் என்கிறார்கள்.
தீவிர ஆலோசனை
இந்த முடிவை எடுக்க தேசிய பாஜக தலைமை 7 மாதம் எடுத்துக் கொண்டது. பல்வேறு திட்டங்களை வகுத்து, ஆலோசனைகளை செய்து கடைசியில்தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள். முக்கியமாக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சிலரும் எல். முருகன் பெயரை பாஜக தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளனர். பலரின் நெருக்கமான நட்பும், தீவிரமான தொடர்பும்தான் முருகனுக்கு இந்த பதவி கிடைக்க காரணம் என்கிறார்கள்.