ஒரே டிராக்கில் 2 ரயில்கள்.. கவரப்பேட்டை விபத்து எப்படி நடந்தது? பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி பதில்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி விளக்கம் அளித்தார். டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்த பிறகும் இது போன்ற விபத்துகள் நடப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், ஒரே டிராக்கில் 2 ரயில்கள் சென்றது எப்படி என்பது குறித்தும் செய்தியாளர்களின் கேள்விக்கு அமர்பிரசாத் ரெட்டி பதில் அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ளது கவரப்பேட்டை ரயில் நிலையம். இது சென்னை சென்ட்ரல் - விஜயவாடா ரயில்வே மெயின் லைனில் அமைந்துள்ள மிகச்சிறிய ரயில் நிலையம் ஆகும். இங்கு மின்சார ரயில்கள் மட்டுமே நின்று செல்லும். இங்கு நேற்ற இரவு சுமார் 8.30 மணியளவில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் பின்பிறமாக பயங்கரமாக மோதியுள்ளது. இதில் 13 பெட்டிகள் தடம்புரண்டது. ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டது.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விபத்து நேரிட்ட இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விபத்தில் 19 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை.. இந்த விபத்து குறித்து அறிந்து விரைந்து சென்ற பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி, மீட்பு பணிகளுக்கு உதவினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இது மிகவும் வேதனையான ஒரு சம்பவம், கவரப்பேட்டையில், நாம் இருக்கிறோம். இது கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா பார்டரில் உள்ள தமிழக பகுதியாகும். இந்த இடத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது சென்னையில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று மோதியது. இந்த விபத்தை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இதில் அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை..
இவ்வளவு பெரிய விபத்து நடந்தாலும், ஆண்டவன் அருளால் எந்த ஒரு உயிர்சேதமும் நடந்ததாக ரிப்போர்ட்டுமே இல்லை.. சிலர் காயம் அடைந்துள்ளார்கள்.. அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.. பயணிகளுக்கு தேவையான வசதியை ரயில்வே அதிகாரிகள் கொடுத்துள்ளார்கள்.. தமிழக அரசு அதிகாரிகளும் கொடுத்துள்ளார்கள்.. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாஜகவினர் அனைவருமே இங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள், காவல்துறை என எல்லாருமே இணைந்து அனைவரையும் மீட்டார்கள்" என்றார்.
அப்போது டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்த பிறகும் இது போன்ற விபத்துகள் நடப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமர்பிரசாத் ரெட்டி, இந்த நேரத்தில் டெக்னிக்கலாக பேசவிரும்பவில்லை.. சூப்பர் பவர் நாடுகளில் கூட விபத்து ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் கூட விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய விபத்திற்கு நடுவே, சின்ன உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயம்.. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு எல்லா விதமான நடவடிக்கையும் எடுத்து வருகிறது என்றார். வடமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் நியமிக்கப்படுவதால் கம்யூனிகேசன் பிரச்சனை வருவதாகவும், வடமாநில தொழிலாளர்கள் கவனக்குறைவாக செயல்படுவதாகவும் செய்தியாளர் ஒருவர் குற்றம்சாட்டினார். மேலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் தான் கவரப்பேட்டையில் ஸ்டேசன் மாஸ்டர் என்றும் கூறினார். இதனை மறுத்த அமர்பிரசாத் ரெட்டி, வடக்கு தெற்கு என்று பிரித்து பார்க்க வேண்டாம். வேண்டுமென்று யாரும் செயல்படமாட்டார்கள் என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications