அந்த ஒரு போன் கால்.. விஜய்யை நம்பி ராகுல் எடுத்த ரிஸ்க்! தவெக காங்கிரஸ் கூட்டணி இறுதியானது எப்படி?
சென்னை: தமிழ்நாடு அரசியலில் மிகப் பெரிய திருப்பமாக திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. நேற்றைய தினம் திமுக கூட்டணியில் இருந்து விலகி, விஜய்யின் தவெக உடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்தது. இந்த மாற்றம் எப்படி நடந்தது.. இதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாடு அரசியலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசியல் குழப்பம் உச்சத்தில் இருக்கிறது. இந்த தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் கூட பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 இடங்களில் வென்றுள்ள தவெக, பெரும்பான்மை நம்பரை எட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் தவெகவுக்கு முதலில் வந்த ஆதரவு கரம் கொடுத்தது காங்கிரஸ் தான்.

விரிசல்
பல ஆண்டுகளாக தேசியளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, திமுக உடன் இணைந்தே காங்கிரஸ் பயணித்து வந்தது. இந்தச் சூழலில் தான் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. இந்த மோதலுக்கு என்ன காரணம்.. ராகுல் காந்தி Vs மு.க. ஸ்டாலின்.. விரிசல் எங்கிருந்து தொடங்கியது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
டெல்லிக்கு போன பிரஷர்
சீட் பகிர்வு பேச்சுவார்த்தையின் போதே காங்கிரஸ் 40 இடங்களையும், அமைச்சரவையில் பங்கையும் கேட்டது. ஆனால் திமுக வெறும் 28 இடங்களை மட்டுமே ஒதுக்கி, அமைச்சரவையில் இடமில்லை என்று கறாராகக் கூறிவிட்டது. இது காங்கிரஸுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போது பல காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்கச் சொன்னார்கள். குறிப்பாக மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் வெளிப்படையாகவே இது தொடர்பாகக் கருத்துகளைக் கூறினார். இதற்காக டெல்லிக்கு பிரஷும் போட்டனர்.
முன்கூட்டியே கணித்த ராகுல்
ராகுல் காந்தியுமே கூட ஒரு கட்டத்தில் விஜய்யுடன் கூட்டணி அமைக்க ஓகே சொல்லிவிட்டார். இருப்பினும், கார்கே, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் தான் திமுக உடனேயே தொடரலாம் என்ற முடிவை எடுத்தாக தெரிகிறது. இதனால் திமுக உடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க முடிவு செய்தது. அப்போதும் கூட ராகுல் காந்தியும் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவில்லை. இது இரு தரப்பிற்கும் இடையே விரிசல் இருப்பதை வெளிப்படையாகக் காட்டியது.
1967-க்குப் பிறகு தமிழகத்தில் அதிகாரத்தில் பங்கெடுக்காத காங்கிரஸுக்கு, இது ஒரு பொற்கால வாய்ப்பு. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இரண்டு இடங்களைப் பெறக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. திமுகவின் நிழலில் இருந்து வெளியேறி, தனது சொந்தக் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த இது சரியான நேரம் என ராகுல் காந்தி கருதுகிறார்.
அந்த ஒரு கால்
இதன் காரணமாகவே தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே, டிரெண்ட் தெரிந்தவுடன் விஜய்க்கு போன் போட்டு வாழ்த்துக் கூறினார் ராகுல் காந்தி! அப்போது எந்தவொரு சூழலில் காங்கிரஸ் உங்களுக்கு நிச்சயம் ஆதரவாக இருக்கும் என ராகுல் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த போன் கால் தான் தவெக- காங்கிரஸ் கூட்டணிக்கு அடித்தளம் போட்டு இருக்கிறது.
ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், விஜய்யின் 108 மற்றும் காங்கிரஸின் 5 இடங்கள் சேர்ந்து 113 இடங்களை எட்டியுள்ளன. மதவாத சக்திகளை விலக்கி வைக்க வேண்டும்" என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு தந்துள்ளது. மீதமுள்ள 5 இடங்களைச் சேர்க்கும் முயற்சியிலேயே விஜய் தரப்பு இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications