நைட்டோடு நைட்டா.. ஆட்டத்தையே முடிச்சிட்டாங்க.. இதுதான் திமுக.. மிகப்பெரிய பாடம் எடுத்துட்டாங்களே
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் களத்தில் அமைதியாக அரங்கேறிய ஒரு 'டேட்டா புரட்சி' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக ஜூன் மாதம் வரை காத்திருக்காமல், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே டிரெண்டுகளை துல்லியமாகக் கணிக்கும் திமுகவின் அறிவியல் பூர்வமான அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
படிவம் 17C - திமுகவின் துருப்புச் சீட்டு
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளின் அதிகாரப்பூர்வ கணக்கு 'படிவம் 17C'-இல் பதிவு செய்யப்படுகிறது. இதனை அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு (Booth Agents) தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்குவார்கள். வழக்கமாக பல கட்சிகள் இதை வெறும் ஆவணமாக மட்டுமே பார்க்கும் நிலையில், திமுக தலைமை இதனை ஒரு மிகச்சிறந்த 'தகவல் களஞ்சியமாக' மாற்றியுள்ளது.

நேற்று வாக்குப்பதிவு முடிந்த கையோடு, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டிருந்த திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் (BLAs), தங்களுக்கு வழங்கப்பட்ட 17C படிவங்களை உடனடியாக சேகரித்தனர்.
ஆண்-பெண் வாரியாகத் துல்லியக் கணக்கு
திமுகவின் இந்தத் திட்டமிடலில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அவர்கள் வெறும் மொத்த வாக்குகளை மட்டும் கணக்கிடவில்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும்:
- மொத்த ஆண் வாக்காளர்கள் எத்தனை பேர்?
- பெண் வாக்காளர்கள் எத்தனை பேர்?
- யார் யாருடைய வாக்குகள் பதிவாகியுள்ளன?
- குறிப்பிட்ட தெருக்களில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன?
போன்ற விவரங்களை நுணுக்கமாகச் சேகரித்து, அவற்றை உடனடியாகத் தொகுதி வாரியாகப் பட்டியலிட்டுத் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
தலைமைக்குக் கிடைத்த 'முன்கூட்டிய' ரிசல்ட்
இந்தத் தரவுகள் அனைத்தும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னல் வேகத்தில் சென்றடைந்தன. இதன் மூலம், ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பே, திமுக தலைமைக்குத் டிரெண்ட் என்ன, எந்தத் தொகுதியில் நிலவரம் எப்படி உள்ளது.. யாருக்கு சாதகமான சூழல் உள்ளது என்ற தெளிவான சித்திரம் கிடைத்துவிட்டது.
குறிப்பாக, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது எந்தத் திட்டங்களின் தாக்கம் என்பதையும், வாக்கு சதவீதம் குறைந்த இடங்களில் எங்கே கோட்டை விட்டோம் என்பதையும் இப்போதே ஆய்வு செய்ய இது உதவுகிறது.
அதோடு தேர்தல் முடிந்து 2-3 வருடம் பின் வாக்களிப்பில் முறைகேடு என்று ராகுல் காந்தி சொல்வது போல இல்லாமல் ... இப்போதே எவ்வளவு வாக்கு.. எவ்வளவு பதிவானது என்ற லிஸ்ட் தெளிவாக திமுகவிடம் இருக்கும். இது மற்ற கட்சிகளுக்கு பெரிய பாடம்.
மற்ற கட்சிகளுக்குப் பாடம்
அரசியல் என்பது வெறும் மேடைப் பேச்சோடு முடிந்துவிடுவதில்லை; அது தரவுகளைத் துல்லியமாகக் கையாளும் நிர்வாகத் திறமையிலும் உள்ளது என்பதை திமுக நிரூபித்துள்ளது. மற்ற கட்சிகள் தேர்தல் முடிவுகள் வரும் வரை 'எக்ஸிட் போல்' முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்க, திமுக தனது சொந்த 'பூத் போல்' தரவுகளைக் கொண்டு அடுத்தகட்டப் பணிகளைத் திட்டமிடத் தொடங்கிவிட்டது.
இந்த மைக்ரோ லெவல் மேலாண்மை (Micro-level management) தான் ஒரு கட்சியை அடிமட்டத்தில் பலப்படுத்துகிறது. வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்காமல் தடுப்பதற்கும், பதிவான வாக்குகளில் குளறுபடி ஏற்படாமல் காப்பதற்கும் இந்த 17C படிவங்களின் நகல்கள் அசைக்க முடியாத ஆதாரங்களாக விளங்கும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூமிற்குச் சென்றிருக்கலாம். ஆனால், அந்த இயந்திரங்களுக்குள் இருக்கும் 'ரகசியத்தை' 17C படிவங்கள் வாயிலாக இப்போதே கையில் எடுத்துவிட்டது திமுக. தொழில்நுட்பத்தையும் தரவுகளையும் சரியாகப் பயன்படுத்தும் ஒரு கட்சி, களத்தில் எப்படி முன்னிலை பெறும் என்பதற்கு இதுவே சாட்சி.













Click it and Unblock the Notifications