சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் சூப்பர் மாற்றம்.. 00 கிமீ வேகத்தில் போனாலும்.. வருது நல்ல செய்தி
சென்னை: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதுவரை நீங்கள் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி, பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தி வந்தீர்கள். அதற்காக அங்கு வேகத்தடைகள் கூட இருக்கும். ஆனால், இனி வாகனங்களைச் சற்றும் நிறுத்தாமல், மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போதே கட்டணத்தை வசூலிக்கும் புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டமிட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் பல்வேறு நாடுகளில் இருக்கிறது.
இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான சுங்க்ச்சாவடிகள் உள்ளன. அவற்றில் தற்போதுள்ள பாஸ்டேக் முறையில், வாகனங்கள் சுங்கச்சாவடியை நெருங்கும்போது வேகம் குறைந்து, ஸ்கேனர் கருவி ஸ்டிக்கரைப் படிக்கும் வரை காத்திருக்க வேண்டிய நிலை வாகன ஓட்டிகளுக்கு உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் எரிபொருள் விரயத்தை வாகன ஓட்டிகள் சந்தித்து வருகிறார்கள்.

வாகன ஓட்டிகளின் கஷ்டத்தை தவிர்க்க, செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கொண்ட அதிநவீன கேமராக்களைப் பொருத்தத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.
இந்தக் கேமராக்களின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்ன
இனி தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு வாகனம் 100 கி.மீ. அல்லது அதற்கு மேலான வேகத்தில் கடந்து சென்றாலும், அதன் பதிவு எண்ணைத் துல்லியமாக அடையாளம் கண்டுவிடும். இதற்காகச் சீனா, தைவான், தென்கொரியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து உயர்தர கேமராக்களை இறக்குமதி செய்ய அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படி கேமரா இருந்தால், ரீடிங் பிரச்சனை இருக்காது. வேகத்தை குறைக்க வேண்டிய அவசியமே இருக்காது..
தொழில்நுட்பம் எப்படிச் செயல்படும்
இந்தியாவில் உள்ள சுமார் 1,150 சுங்கச்சாவடிகளில் இந்த புதிய முறை அமலுக்கு வரப்போகிறது. வாகனங்களின் பதிவு எண்ணை அடையாளம் காணும் கேமராக்கள், ரேடியோ அதிர்வெண் அடையாள கருவி மற்றும் ஏஐ மென்பொருள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படும். இதன் மூலம் வாகனம் சுங்கச்சாவடியைக் கடக்கும் அதே வினாடியில், தானியங்கி முறையில் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டுவிடும்.
புதிய முறையினால் கிடைக்கும் நன்மைகள்
இந்த அதிநவீனத் திட்டத்தினால் வாகன ஓட்டிகளுக்கும், அரசுக்கும் பல பிரச்சனைகள் நிச்சயம் தீர்ந்துவிடும். வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் வரிசையில் நின்று காத்து நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் பயண நேரம் கணிசமாகக் குறையும். வாகனங்களை நிறுத்தி மீண்டும் இயக்குவதால் ஏற்படும் எரிபொருள் விரயம் இருக்காது. நெடுஞ்சாலைகளில் தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படும், குறிப்பாகப் பண்டிகை காலங்களில் ஏற்படும் நீண்ட வாகன வரிசைகள் இனி இருக்காது.
அரசுக்கு நன்மை
மனிதத் தலையீடு குறைவதால், கட்டணம் வசூலிப்பதில் ஏற்படும் குளறுபடிகள் தவிர்க்கப்பட்டு, ஜி.பி.எஸ் மற்றும் ஏஐ மூலம் துல்லியமான கணக்கீடு நடைபெறும் என்பதால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். செலவும் அதற்கு குறைந்துவிடும். சரக்கு லாரிகள் மற்றும் வணிக வாகனங்கள் விரைவாகச் சென்றடைவதால் பயணங்கள் எளிதாகும். இந்தியாவின் 1.46 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைப் பயணத்தை இந்தத் தொழில்நுட்பம் சிறப்பாக மாற்றும் என்று நம்பலாம்.












Click it and Unblock the Notifications