உதயநிதி கண்ட்ரோலில் முதல்வரின் முக்கியமான துறை.. ஸ்டாலின் கொடுத்த "சூப்பர் பவர்".. ஏன் முக்கியம்?
சென்னை: முதல்வர் ஸ்டாலினிடம் உள்ள முக்கியமான துறை ஒன்றை உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது வழங்கி உள்ளனர். அவருக்கு இந்த துறை வழங்கப்பட்டது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டு உள்ளன. மற்றபடி எந்த அமைச்சரையும் முதல்வர் ஸ்டாலின் நீக்கவில்லை.
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இன்று இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் அளிக்கப்படுகிறது.

உதயநிதி
மேலும் முதல்வர் ஸ்டாலினிடம் உள்ள முக்கியமான துறை ஒன்றை உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது வழங்கி உள்ளனர். தற்போது முதல்வர் ஸ்டாலினிடம் பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள், சிறப்புத்திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய துறைகள் உள்ளன. இதில் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை முதல்வரிடம் உள்ளது. இந்த துறைதான் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

சிறப்பு திட்டங்கள்
இது கிட்டத்தட்ட ஒரு சூப்பர் பவர் போன்றது. இந்த துறையை வைத்து இருக்கும் அமைச்சர்.. எந்த துறைக்கு கீழ் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும். உதாரணமாக கல்வித்துறை அமைச்சர் போக்குவரத்து துறையில் அறிவிப்புகளை வெளியிட முடியாது. ஆனால் இந்த சிறப்பு திட்ட செயலாக்க துறையை கையில் வைத்து இருக்கும் அமைச்சர் எந்த துறையில் வேண்டுமானாலும் சிறப்பு திட்டங்கள் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிட முடியும். பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. துறை ரீதியான அறிவிப்பு இல்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். முதல்வர்தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார்.

ஏன் முக்கியம்
அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. சிறப்பு திட்டங்களை கண்காணிக்கவும் இந்த துறை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு திட்டங்களை கண்காணிக்க தனியாக ஒரு துறை தமிழ்நாட்டில்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற துறைகளுடன் இந்த துறை அமைச்சர் (முதல்வர்) இணைந்து செயல்படுவார்.தற்போது முதல்வரிடம் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த துறை சென்றுள்ளது. இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் "சிறப்பு" திட்டங்களை கண்காணிக்க முடியும். அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக எப்படி செய்வது என்பது தொடர்பாக இந்த துறை ஆலோசனைகளை வழங்க முடியும்.

இணைந்து பணியாற்ற முடியும்
மற்ற துறைகளை கண்காணிக்கும் வாய்ப்பு உதயநிதிக்கு கிடைக்கும். இதன் மூலம் மற்ற துறைகளுடன் உதயநிதி இணைந்து பணியாற்ற முடியும். அதேபோல் சீனியர் அமைச்சர்களுடன் உதயநிதி ஸ்டாலின் இணைந்து பணியாற்ற முடியும். அதேபோல் பல துறைகளில் உதயநிதி அனுபவம் பெறுவதற்கு வசதியாக இந்த துறை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக வேளாண்மை, கல்வி, நீர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில்கள் மற்றும் கட்டமைப்பு ஆகிய துறைகள் மீது அதிகம் கவனம் செலுத்துவதற்காக இந்த சிறப்பு துறை உருவாக்கப்பட்டு உள்ளது. கல்வி துறையில் ஒரு சிறப்பு அறிவிப்பை இந்த சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை அறிவிக்கிறது என்றால், கல்வித்துறையோடு இணைந்து அந்த திட்டத்தை சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை செயல்படுத்தும்.
இது மிகவும் முக்கியமான துறை என்பதால் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் இதில் கவனம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications