ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்றது ஏன்? புகழேந்தியிடம் என்ன பேசினார்? பரபர தகவல்
சென்னை : அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்ள காரணம் என்ன என்பது குறித்தும், எடப்பாடி பழனிசாமி எப்படி அவரை சமாதானம் செய்தார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கொறடாவாக தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, பொருளாளராக கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, செயலாளராக பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக ஆலங்குளம் எம்எல்ஏ பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

ஓ பன்னீர்செல்வம்
எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஆரம்பம் முதலே ஏற்க மறுத்துவந்த ஓ பன்னீர்செல்வம் எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் கட்சியின் அதிகாரத்தில் நம்பர் 1 என்ற அந்தஸ்துடனே எப்போதும் போல் இருந்திருக்க முடியும். ஆனால் அவரை எப்படியும் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்க வைத்தே தீர வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தாராம்.

ஏன் ஏற்றார்
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியுடன் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஒப்பிட்டால் எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவருக்கு பக்கத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் தான் உட்கார வைக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. எனவே எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்காவிட்டால் சட்டசபையில் புரோட்டாகால்படி பின்வரிசையில் ஓபிஎஸ் அமர வேண்டியது வரும் என்றும் சொல்லப்பட்டதாம். அத்துடன் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஓ பன்னீர்செல்வத்திடம் கட்சியின் நலன் கருதி பதவியை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசியிருக்கிறார்கள். அதன்பின்னரே சமாதானம் ஆகி ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டாராம்.

புகழேந்தி நீக்கம்
இதனிடையே ஓபிஎஸ்க்கு ஆதரவாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸை விமர்சித்த புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்பட காரணம் சசிகலாவிற்கு ஆதரவாக பேசியதுடன், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கேபி முனுசாமியை விமர்சித்ததும் காரணம் என்கிறார்கள்.

என்ன சொன்னார் ஓபிஎஸ்
இதனிடையே புகழேந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனியார் தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ஓபிஎஸ் குறித்து நான் பேச விரும்பவில்லை. அவரது கைமீறி சென்றுவிட்டதாக உணர்கிறேன். இவர்கள் ஓபிஎஸ்ஸை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது நன்றாக தெரிகிறது. அவரை ஒவ்வொரு விஷயத்திலும் கட்டம் கட்டிக் கொண்டே இருக்கின்றனர். அவரை மிரட்டி கையெழுத்து பெற்றதாக தெரிகிறது. 'கொஞ்சம் பொறுமையாக இருங்கள்; ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறேன்..' என்று அவரே என்னிடம் தெரிவித்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

சமரசம் ஏன்
சசிகலா ஒரு பக்கம் கட்சியை கைப்பற்ற காய்நகர்த்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமி தன் ஆளுகைக்குள் கட்சியை கொண்டு வர விரும்புகிறார். ஆனால் தற்போதைய நிலையில் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் மிக அமைதியாக இருந்து வருகிறார். தனக்கு ஆதரவாக பேசிய புகழேந்தியை நீக்குவதற்கு கூட கையெழுத்து போட்டுள்ளார். தற்போதைய நிலையில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்களுடன் இணக்காமான போக்கையே கடைபிடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. கட்சி தன்னால் உடைந்துவிடக்கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பதால் சமசரத்தை தொடர்கிறாராம்.












Click it and Unblock the Notifications