கார் வைத்துள்ளவர்களுக்கு மத்திய அரசின் முக்கியமான அறிவிப்பு.. டோல்கேட்டில் அடியோடு மாறும் டெக்னிக்
சென்னை: இந்தியாவில் முதல் முறையாக சுங்கச்சாவடியில் தானாகவே கட்டணம் வசூலிக்கும் முறை குஜராத் மாநிலம் தேசிய நெடுஞ்சாலை-48 ல் சூரத்-பரூச் பிரிவில் உள்ள சோராயாசி சுங்கச்சாவடியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இந்திய சுங்கச்சாவடிகளை டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் ஆகியவற்றை உலகத்தரத்துக்கு ஏற்ப மாற்றியதில் இது மிகப்பெரிய மைல்கல். இதன்மூலம் பயண நேரம் குறையும். நெரிசல் குறையும். எரிபொருள் பயன்பாடு, வாகன மாசு ஆகியவை குறையும் என்றார்.
இந்தியா முழுவதுமே தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்கிறது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம். புதிய சாலைகளை போட்டதற்காக 15 ஆண்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அதன்பிறகு பராமரிப்புக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வசூலிக்கலாம் என்று முடிவு செய்து வசூலித்து வருகிறது. அதன்படி புதிய சாலைகளை அமைக்கவும், பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஆகும் செலவுகளை ஈடுகட்ட கட்டணத்தை வசூலிக்கிறது.

பாஸ்டேக் கட்டாயம்
சுங்கச்சாவடிகளை பொறுத்தவரை ஆரம்பத்தில், ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர், மின்னணு பரிமாற்றம் ஏற்றுக்கோள்ளப்பட்டது. பிறகு, கார் கண்ணாடியில் ஒட்டப்படும் 'பாஸ்டேக்' வில்லைகள் மூலம் கணக்கில் இருந்து பணம் வசூலிக்கும் முறை அறிமுகம் ஆனது. பாஸ்டேக் இருந்தால் கட்டணம் பாதியாக இருக்கும். இல்லாவிட்டால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது நடைமுறையில் இருக்கிறது. பாஸ்டேக் இல்லாவிட்டால், டிஜிட்டல் பரிவர்த்தனை தான் ஒரே வழியாக இருக்கிறது.
குஜராத்தில் அறிமுகம்
இதனிடையே அடுத்தகட்டமாக, இந்தியாவிலேயே முதல் முறையாக தானாகவே கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் தேசிய நெடுஞ்சாலை-48 ல் சூரத்-பரூச் பிரிவில் உள்ள சோராயாசி சுங்கச்சாவடியில் இந்த தடையற்ற சுங்க கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
வாகனங்களை நிறுத்த வேண்டியது இல்லை
சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டியது இல்லை. கேமராக்கள், சென்சார்கள் ஆகியவை மூலம், வாகன எண்பலகை மற்றும் 'பாஸ்டேக்' வில்லையை அடையாளம் கண்டு கட்டணம் வசூலித்துவிடும். டோல்கேட்டை கடக்கும் போது வாகனத்தை நிறுத்தாமலேயே தானாக கட்டணம் வசூலிக்கும் வகையில் தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
நிதின் கட்காரி விளக்கம்
இதுகுறித்து நிதின் கட்காரி தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டண முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளோம். இந்திய சுங்கச்சாவடிகளை டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் ஆகியவற்றறை உலகத்தரத்துக்கு ஏற்ப மாற்றியதில் இது மிகப்பெரிய மைல்கல் ஆகும். இதன்மூலம் பயண நேரம் குறையும். நெரிசல் குறையும். எரிபொருள் பயன்பாடு, வாகன மாசு ஆகியவை குறையும். கட்டண வசூலில் மனித தலையீடு நிச்சயம் குறையும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications