'அரசுகள்' கைவிட்ட கல்வராயன் மலை.. 'சமூக விரோதிகளால்' 'கள்ளச்சாராய மலையாக' உருமாறிய கொடூரம்- பின்னணி!
சென்னை: தமிழ்நாட்டில் எத்தனையோ மலைகளும் குன்றுகளும் இயற்கை வளங்களோடும் சுற்றுலா தலங்களாகவும் 'கொண்டாட்டத்துக்குரிய' மக்கள் வாழ்விடங்களாக இருக்கின்றன. இதில் விதிவிலக்காகிப் போனதுதான் கிழக்க்கு தொடர்ச்சி மலையின் கல்வராயன் மலைப்பகுதிகள். வட மாவட்டங்களுக்கான கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்படும் பிரதான மையமாக, போலி மதுபான ஆலைகள் செயல்படும் பிரதேசமாக சமூக விரோதிகளால் உருமாற்றப்பட்டிருக்கிறது கல்வராயன் மலை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தான் கல்வராயன் மலை உள்ளது. கல்வராயன் மலையில் 15 ஊராட்சிகள், 117 குக்கிராமங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான குக்கிராமங்கள், பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்விடமாக இருந்தாலும் கல்வராயன் மலைகளில் கிஞ்சித்தும் அடிப்படை வசதிகளைப் பார்த்துவிட முடியாது. ஒவ்வொரு மலைக் கிராமமும் இன்னொரு மலை கிராமத்துடன் மண் சாலைகளால் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். ஆம் எந்த ஒரு அடிப்படை வசதிகளுமே செய்து தரப்படாத ' அரசுகளால்' கைவிடப்பட்ட ஒரு சூனியப் பிரதேசம் போலதான் நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் கல்வராயன் மலை கிராமங்கள் இருக்கின்றன.

கள நிலவரம் என்ன?: கல்வராயன் மலையில் பெருமளவில் மரவள்ளிக்கிழங்குதான் பயிரிடப்படுகிறது. இன்னொரு பக்கம், பெருந்திரளான மக்கள் புலம் பெயர் தொழிலாளர்களாக அண்டை மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்று விடுகின்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பி, வாழ்வாதாரத்துக்காக போராடுகிற பொதுமக்களின் 'வறுமை'யை 'வேலைவாய்ப்பின்மை'யை சமவெளி சமூக விரோதிகள் முழுவீச்சில் பயன்படுத்துகின்றனர்.
சமூக விரோதிகள்: சமவெளி சமூக விரோதிகள்தான் கல்வராயன் மலையை கள்ளச்சாராய உற்பத்தி மையமாக்கியவர்கள். அந்தக் கட்சி இந்த கட்சி ஆட்சி என்பது எல்லாம் எதுவும் கிடையாது. கள்ளச்சாராயம் தயாரிக்க முதலீடு செய்து,. கள்ளச்சாராய விற்பனையை கனஜோராக சமூக விரோதிகள் நடத்தி வருவதற்கு பக்க பலமாக தங்களது 'கல்லா' வை நிரப்புகிற அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், அரசு நிர்வாக கட்டமைப்பின் கறுப்பு ஆடுகள்தான் பிரதான காரணம் என்கின்றனர் கல்வராயன் மக்கள்.
அரணாக நிற்கும் அதிகார வர்க்கம்: அதிகாரத்தில் இருக்கும் அத்தனை கரைவேட்டிகளுக்கும் கப்பம் கட்டுவது; நிர்வாகத்தில் இருக்கும் அத்தனை கட்டமைப்புகளுக்கும் கப்பம் கட்டுவது.. இப்படி அரசியல் வர்க்கமும் அதிகார வர்க்கமும் இணைந்தே சமூக விரோதிகளின் கள்ளச்சாராயத் தொழிலுக்கு கல்வாரயன் மலையை காவு கொடுத்துவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத யதார்த்தம். கள்ளச்சாராய சாவுகள் நிகழும் போதெல்லாம் போர்க்கால அடிப்படையில் பாயும் நடவடிக்கைகள் அதற்கு முன்னர் ஏன் எடுக்கப்படுவதில்லையே என்கிற கேள்வி காலம் காலமாக கேட்கப்படுகிறது. ஆனால் அரசியல் பிளஸ் அதிகார வர்க்கம் கள்ள மவுனிகளாக கள்ளச்சாராயம் எனும் கொடூர விஷத்தை உற்பத்தி செய்கிற சமூக விரோதிகளுக்கு காவலரணாகவே இருந்துவிடுவதால்தான் கொத்து கொத்தாக செத்து மடிகின்றன மனித உயிர்கள்.. இயற்கையின் பெருவளமான கல்வராயன் மலையும் கள்ளச்சாராய மலை என்கிற அவப்பெயரை காலந்தோறும் தாங்கிக் கொண்டே தலைமுறைகளைக் கடந்து கொண்டே இருக்கிறது!
அரசியல் கட்சி நிர்வாகிகள்: கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்த உடன் அரசு நிர்வாகத்தில் 'இடைநீக்க' நடவடிக்கைகள் பாய்கின்றன.. கட்சித் தலைவர்கள் சரமாரி கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள், கட்சித் தலைவர்கள் அத்தகைய மனித உயிர்களை குடிக்கிற கள்ளச்சாராய கொலைகாரர்களுடன் கூட்டு வைத்திருக்கும் சொந்த கட்சி நிர்வாகிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? இன்று ஒரு கண்ணுக்குடி சிறைக்குப் போனால் நாளை ஒரு எருமைக்கண்ணு என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவார்; அவருக்கு துணிச்சலையும் பாதுகாப்பையும் தருவது அதிகாரமும் அரசியலும்தான். ஆகையால் அரசியல் கட்சிகளும் மனசாட்சியுடன் தங்களது கட்சிகளில் உள்ள கள்ளச்சாராய கொலையாளிகளின் 'பாதுகாவலர்கள்' பக்கம் கவனத்தை திருப்பித்தான் ஆக வேண்டும்- அதுதான் தார்மீக கடமையும்கூட!












Click it and Unblock the Notifications