மகன்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்.... வாரிசுக்கு வாக்கு கேட்பது எவ்வளவு கஷ்டம்னு!
Recommended Video

சென்னை: மகன்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்.... வாரிசுக்கு வாக்கு கேட்பது எவ்வளவு கஷ்டம் என்பது... ஆமாம் நம் தேசத்தின் அரசியல் தலைவர்கள் தனக்கு பின் தன்னுடைய செல்வாக்கு தன் மகனுக்கு செல்லவேண்டும் என்று எவ்வளவு போராடுகிறார்கள் என்பதை கண் முன்னே நீங்களே பார்த்திருப்பீர்கள்.
தலைவனாக ஆவதற்கு நம்மூர் அரசியல்வாதிகள் பட்ட கஷ்டத்தைவிட தனது மகனை தலைவனாக கொண்டாடவைக்க, நிறையே தனது உழைப்பை, சம்பாதித்த செல்வத்தை செலவழிக்க வேண்டியிருக்கிறது.
நம் அரசியல் தலைவர்களின் வாரிசுகளை அடிப்படை உறுப்பினராக்கி தலைவனாக்கி அழகு பார்க்கலாம் என்றால் விடுகிறார்களா, நம் சமூக வலைதள பிரபலங்கள், மீம்ஸ் மற்றும் நையாண்டிகள் செய்து காய்ச்சி எடுத்து தொங்க விடுகிறார்கள். இதையும் நீங்கள் தினமும் பார்த்துக்கொண்டுதான் வந்திருப்பீர்கள்.

என்மகன் என் உரிமை
என்னுக்கு பின் என்னுடைய சொத்துக்களுக்கு மட்டுமல்லாமல் என்னுடைய செல்வாக்குக்கும் என் மகனும், மகளும் தான் வாரிசு என நம் அரசியல் தலைவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதனால் வழிவழியாக சந்ததி சந்ததியாக பெயர், புகழ் பணத்தை காப்பாற்ற வாரிசு அரசியல் தவறில்லை என அவர்கள் நம்புகிறார்கள். மக்களையும் நம்ப வைக்கிறார்கள்.

எதிர்க்கும் தலைகள்
குனிந்து, நிமிர்ந்து, காலில் விழுந்து, கடைசியில் பல போராட்டங்களுக்கு பின் ஒருவழியாக செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராக நாம் தலைவர்கள் மாறுகிறார்கள். அப்படி வந்தபின் மகனுக்கு சீட் கேட்டால் கூடவே இருக்கும் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பார்கள். அவர்களின் வாயை அடைத்து அதையும் தாண்டி மகனுக்கு சீட்டை பெற்றால் வாரிசு அரசியல் என பிடிக்காத எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்யும்.

வாக்காளர்களின் பதில்
ஒரு வழியாக சீட்டு வாங்கிய பின், வாரிசுகளுக்கு, வால் பேப்பர் போஸ்டர் அடிப்பதில் இருந்து வீதி வீதியாக வாக்கு கேட்பது வரை அத்தனையும் முன்னின்று செய்ய வேண்டி உள்ளது. மகன் பிறந்த போது இந்த சட்டை போட்டால் அழகாக இருப்பான், இந்த உணவு கொடுத்ததால் சேராது என பார்த்து பார்த்து வளர்த்த பாசமகனுக்காக வாக்கு கேட்க கொளுத்தும் வெயிலில வீதி வீதியாக சென்றால், அங்கும் பலர் மன்னர் பரம்பரை மாதிரி இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி என, எப்படியெல்லாம் சாட்டையால் அடிக்கிற மாதிரி கேட்பார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

அமைதியே வளம்
அப்போது அவர்களிடம் இனி என் மகனை உங்களிடம் தத்துக்கொடுப்பதாகவும், இனி மகன் உங்க வீட்டு பிள்ளை என்றும் எவ்வளவு உருக்கமாக பேச வேண்டியிருக்கும் தெரியுமா? அப்படி பேசியும் கரையாத கல்நெஞ்சக்காரர்கள் சிலர், உன் சொத்தை எழுதிக்கொடு உன் மகனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என எகத்தாளம் பேசுவார்கள். அதையெல்லாம் அமைதியாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.

வீணாகும் உழைப்பு
ஆற்றாமையால் ஆர்ப்பரித்தால் அனைத்தும் வீணாகிவிடும் என்பதால் பொறுமையாக வெயில் மழை என பாராமல் பாடுபட்டு மகனுக்கு ஓட்டுக்களை சேர்த்து வைத்திருப்பார்கள் நம் அரசியல் தலைகள். அப்போது திடீரென வடிவேலு பாணி மீம்ஸ்களை இணையத்தில் தெறிக்கவிட்டு இமேஜை காலி செய்கிறது ஒரு கூட்டம். இவர்களையும் கடந்துதான் வெற்றிக்கு மகனோடு போராட வேண்டி இருக்கிறது.

மக்கள் சக்தி
பரிட்சைக்கு போகும் மகனுக்கு தூங்காமல் உட்கார்ந்து டீ போட்டு கொடுத்த போது கூட இவ்வளவு அச்சத்தோடு இருந்திருக்க மாட்டார்கள் நாம் அரசியல் தலைவர்கள். பணம் பலம்,அதிகார பலத்தையும் தாண்டி, இங்கே அரசியல் வெல்வதற்கு மக்கள் பலம் வேண்டும். அதை சம்பாதித்தால் பண பலம், அதிகார பலம் இரண்டும் தேடி வரும் என்பது நம் அரசியல் தலைவர்களுக்கு தெரியும். அதனால் சம்பாதித்த அத்தனையையும் இறக்கியாவது மகனை வெற்றி பெற வைக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்.... .!!












Click it and Unblock the Notifications