திமுகவில் மகளிருக்கு எத்தனை எம்.பி.சீட்? எடப்பாடி பழனிசாமி வகுக்கும் பிரச்சார வியூகம்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவில் எத்தனை பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக எத்தனை பெண் வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறதோ அந்த எண்ணிக்கையை விட கூடுதலாக அதிமுகவில் ஒன்றிரண்டு சீட்களாவது பெண்கள் கோட்டாவிற்கு எடப்பாடி பழனிசாமி வழங்குவார் எனத் தெரிகிறது. உதாரணத்துக்கு திமுகவில் 3 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டால் அதிமுக சார்பில் 4 பெண் வேட்பாளர்களை போட்டியிட வைப்பது என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் பெண்ணுரிமை பேசும் திமுக தேர்தலில் எத்தனை பெண்களுக்கு எம்.பி.சீட் கொடுத்திருக்கிறது என பாருங்க, நாங்கள் எத்தனை பேருக்கு எம்.பி.சீட் கொடுத்திருக்கிறோம் என்று பாருங்கள் என தேர்தல் பிரச்சாரத்தில் பேச வியூகம் வகுத்திருக்கிறது அதிமுக தலைமை. திமுகவை பொறுத்தவரை தற்போது 3 எம்.பி.க்கள் உள்ளனர். அதில் தமிழச்சி தங்கபாண்டியனும், கனிமொழியும் மக்களவை உறுப்பினர்களாகவும் கனிமொழி சோமு மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார்கள்.
இதனிடையே திமுகவில் இளைஞரணிக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் 5 சீட்கள் வரை ஸ்டாலின் ஒதுக்கக் கூடும் எனக் கூறப்படும் நிலையில், மகளிரணிக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை கனிமொழி எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது. கனிமொழி தற்போது மகளிரணிச் செயலாளர் இல்லை என்றாலும் அந்த அணியின் பொறுப்பாளராக உள்ளார். இதனால் அதன் அடிப்படையில் அவர் மகளிரணிக்கு உரிய பிரதிநிதித்துவத்தை எதிர் பார்க்கிறார்.
திமுகவில் உள்ள சிட்டிங் பெண் கவுன்சிலர்களில் சிலர் எம்.பி.சீட் எதிர்பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அதிமுகவை பொறுத்தவரை கோகுல இந்திரா, கீர்த்திகா முனியசாமி, உள்ளிட்ட இன்னும் ஓரிருவர் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனக் கூறப்பட்டாலும் ஜெயலலிதா பாணியில் புது முகங்களை எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications