வீட்டு செலவுக்கு வைத்திருந்த பணம்..ஸ்டாலின் மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் எவ்வளவு?ரசீது வைரல்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 1.36 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வருமானவரி துறையினர் ரசீது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில தினங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வென்று மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக களமிறங்குகிறது.
10ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் இரு கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் களம்
நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடியும் நிலையில், தேர்தல் களத்தில் அனல் காற்று வீசுகிறது. அனைத்து தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் தேர்தல் ஆணையமும் தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் பணிகளில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை
மத்திய அரசின் வருமானவரித் துறையினரும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை நீலாங்கரையில் வசிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் ஆகியோரது பங்களாவில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், சபரீசன் நண்பரின் அலுவலகம், திமுக எம்எல்ஏ மோகனின் மகன் வீடு எனச் சென்னையில் மட்டும் மொத்தம் ஏழு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

திமுக கண்டனம்
இந்த வருமான வரித்துறை சோதனை அரசியல் அரசியல் ரீதியாக தங்களைப் பலவீனப்படுத்த நடத்தப்படும் சோதனை என்றும் ஆனால் திமுக இதற்கெல்லாம் அஞ்சாது என்றும் ஸ்டாலின அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேபோல ஐடி அதிகாரிகளுக்கு டீசல் பணம் தான் விரயம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, இதையெல்லாம் தாண்டி ஒருபடி சென்று தனது முகவரியை கூறி, ரெய்டு நடத்த வரும்படி சவால் விடுத்தார்.

கட்டுக்கட்டாக பணம்
இந்நிலையில், நேற்று மாலையில் இருந்தே வருமானவரித் துறை சோதனையில் என்னவெல்லாம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தொடங்கியது. சபரீசன் வீட்டில் கோடிக் கணக்கில் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வர தொடங்கியது. அது தொடர்பாக சில புகைப்படங்களும் வெளியானது.

வெளியான ரசீது
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வருமானவரி துறையினர் கொடுத்த ரசீது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் 500 ரூபாய் நோட்டுகள் 82, 200 ரூபாய் நோட்டுகள் 154, 100 ரூபாய் நோட்டுகள் 642 என மொத்தம் 1.36 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதையும் சபரீசனிடம் திருப்பி வழங்கிவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுச் செலவுக்கு வைத்திருந்த பணம்
சபரீசன் வீட்டில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக இணையத்தில் வெளியான தகவலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனையில் வீட்டுச் செலவுக்கு வைத்திருந்த பணமே கைப்பற்றப்பட்டுள்ளதாக திமுக ஆதரவாளர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர். திமுகவை முடக்க பாஜக செய்யும் திட்டம் இது என்றும் ஆனால் இது பலன் அளிக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எ வ வேலு
முன்னதாக, கடந்த வாரம் திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ வ வேலுவிற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். ஸ்டாலின் ஒரு புறம் பிரசாரம் செய்ய, மறுபுறம் வருமான வரித்துறையினர் எ வ வேலுவிற்கு சொந்தமான கல்லூரியில் சோதனை நடத்தினர். அதிலும் குறிப்பாகக் கல்லூரி விடுதியில் ஸ்டாலின் தங்கியிருந்த அறையிலும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications