இத்தனை ஆயிரம் கோடி நஷ்டமா? 7 மணி நேரம் முடங்கிய பேஸ்புக்.. மில்லியன்களை இழந்த மார்க் - எப்படி?
சென்னை: உலகம் முழுக்க பல நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் மெசேஞ்சர் முடங்கிய காரணத்தால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பல கோடிகளை இழந்துள்ளார்.
Recommended Video
கடந்த இரண்டு வருடமாக சமூக வலைத்தளமான பேஸ்புக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவ்வப்போது முடங்கி வருவது வழக்கமாகி வருகிறது. திடீரென ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, ஒருமணி நேரம், இரண்டு மணி நேரம் பேஸ்புக் முடக்குவது வழக்கமாகி உள்ளது.
அதேபோல் பேஸ்புக் நிறுவனம் எப்போது வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை வாங்கியதோ, அப்போதில் இருந்து அந்த செயலிகளும் முடங்கி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் இந்த சம்பவங்கள் அதிகம் ஆகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

என்ன ஆனது
நேற்று இரவு பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் முடங்கியது. 7 மணி நேரம் கழித்து இன்று காலை இந்த செயலிகள் மீண்டும் பழையபடி செயல்பட தொடங்கியது. உண்மையில் இந்த முடக்கத்திற்கு என்ன காரணம் என்பதை பேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கவில்லை. என்ன நடந்து எப்படி ஆனது என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை. பெரும்பாலும் டிஎன்எஸ் பிரச்சனை காரணமாக இப்படி ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

டிஎன்எஸ்
டிஎன்எஸ் என்பது இணையத்தின் போன் புக் போன்றது ஆகும். நாம் பேஸ்புக் என்று டைப் செய்யும் போது, அதன் முழு யுஆர்எல் எப்படி இணையத்தில் தோன்றுமோ அதற்கு டிஎன்எஸ்தான் காரணம். இதை அட்ரஸ் புக் என்று சொல்லாம். இந்த டிஎன்எஸ் பக்கத்தில் இருந்து பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வெளியேறிய காரணத்தால் இப்படி நேர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏன்?
ஆனால் எதனால் இந்த டிஎன்எஸ் முடக்கம் ஏற்பட்டது என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த நிலையில் 7 மணி நேரம் முடக்கம் காரணமாக 52 ஆயிரம் கோடி ரூபாயை மார்க் ஜுக்கர்பெர்க் இழந்துள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் விளம்பரத்தை நம்பி இருக்கிறது. இந்த நிலையில் 7 மணி நேர முடக்கம் காரணமாக, பேஸ்புக் பக்கத்தில் இருந்து பல நிறுவனங்கள் விளம்பரங்களை எடுத்துக்கொண்டன.

விளம்பரம்
7 மணி நேரமாக எந்த விதமான விளம்பரமும் இதில் செல்லவில்லை. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதம் வரை சரிந்தது. இதன் காரணமாக மார்க் ஜுக்கர்பெர்க் 52 ஆயிரம் கோடி ரூபாயை இழந்தார், கடந்த சில மாதங்களில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் விளம்பரம், அரசியல் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 15 சதவிகிதம் வரை இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு
இந்த நிலையில் பேஸ்புக், இன்ஸ்ட்டா முடக்கத்திற்கு மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டுள்ளார். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்பில் இருக்க நீங்கள் எங்களின் சமூக வலைத்தளங்களில் எவ்வளவு சார்ந்து இருக்கிறீர்கள் என்று தெரியும். இடையூறுக்கு மன்னித்து விடுங்கள். வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்து விட்டன, என்று மார்க் ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications