கோடி கோடியாக கொட்டும் தமிழ்நாடு.. அள்ளிச் சென்ற தேர்தல் ஆணையம்.. 16 நாளுக்கே தலைசுற்றுது
சென்னை: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ள நிலையில் முதல் 16 நாளில் தங்க நகைகள், வெள்ளி ஆபரணங்கள், ரொக்கப்பணம் என ரூ.110 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் 2வது முறையாக ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமரானார். இந்நிலையில் தான் 2019ல் தேர்வு செய்யப்பட்ட லோக்சபா எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 16ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.

இதனால் மீண்டும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 19ல் முதற்கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
அதன்பிறகு ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜுன் 1 என்று 7 கட்டங்களாக நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் ஜுன் 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரிந்துவிடும். இந்த லோக்சபா தேர்தல் தேதி என்பது கடந்த மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தான் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

பொதுவாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை இந்த நடத்தை விதிகள் அமலில் இருக்கும். அந்த வகையில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மாதம் 16 ம் தேதியே அமலுக்கு வந்துவிட்டன.
இதனால் பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்த சென்றால் ஆவணங்களுடன் செல்ல வேண்டும். அதேபோல் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிக மதிப்பிலான புதிய பொருட்களை கொண்டு செல்லும்போது பறக்கும் படை பிடித்தால் நிச்சயம் அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும். ஆவணங்களை காண்பிக்க தவறும் பட்சத்தில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
‛அழியாத மை’.. விரலில் இடப்படும் தேர்தல் மை அழியாமல் இருப்பது ஏன்? 10 மில்லி கிராமின் விலை தெரியுமா?
இந்நிலையில் தான் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் பறக்கும் படை மூலம் தமிகழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரை மொத்தம் ரூ.110 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.48.61 கோடி ரொக்கப்பணமாகும்.
இதுதவிர ரூ.3.06 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.67 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள், தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் என ரூ.47.53 கோடி மதிப்பிலான பொருட்களும், இலவசமாக வழங்க வைக்கப்பட்டு இருந்த ரூ.9.88 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications