பாஜகவை விடுங்க.. திமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றது தெரியுமா? அடேங்கப்பா!
சென்னை: தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். 2018 முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிக அதிகமான நிதியைப் பெற்றுள்ளது பாஜக. திமுக எவ்வளவு நிதி பெற்றுள்ளது எனப் பார்க்கலாம்.
தேர்தல் பத்திரங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. 2018 ஜனவரியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய குடிமக்கள் அல்லது நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி அளிக்கலாம். 1,000 ரூபாய், 10,000 ரூபாய், 1,00,000 ரூபாய், 10,00,000 ரூபாய், 1 கோடி ரூபாய் என பல்வேறு மதிப்புகளில் தேர்தல் பத்திரங்கள், அங்கீகரிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கி கிளைகளில் குறிப்பிட்ட சில நாட்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதன் மூலம் தனி நபர்கள், பெரு நிறுவனங்கள் என அனைவரும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம்.

தேர்தல் பத்திர நிதி: ரொக்கமாக கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கு மாற்றாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. 2017-2018 மற்றும் 2021-2022 க்கு இடைப்பட்ட காலத்தில், 9,208.23 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பத்திரங்கள் அறிமுகமாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மொத்தம் அளிக்கப்பட்ட தேர்தல் பத்திர நிதியில் 57 சதவீத நிதியை பெற்று பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது.
2017-2018 முதல் 2021-2022 வரை பாஜகவுக்கு பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட பங்களிப்புகளின் மதிப்பு ரூ. 5,271.97 கோடி என தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் சமர்ப்பித்த வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. பாஜக, தேர்தல் ஆணையத்திடம் அளித்த அறிக்கையின்படி, 5 ஆண்டுகளில் ரூ.5,271.97 கோடியை பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. 952.29 கோடியுடன் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.
மாநிலக் கட்சிகளில்: மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பிராந்தியக் கட்சிகளும் தேர்தல் பத்திர நிதியைப் பெரும் அளவில் பெறுகின்றன. மேற்கு வங்கத்தில் 2011ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.767.88 கோடி நன்கொடைகளை பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்தப்படியாக 3ஆம் இடத்தில் உள்ளது திரிணாமுல் காங்கிரஸ். ஒடிசாவில் ஆட்சி செய்து வரும் கட்சியான பிஜு ஜனதா தளம் 2018-2019 மற்றும் 2021-2022 க்கு இடையில் 622 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றதாக அறிவித்தது.
திமுக பெற்றுள்ள தேர்தல் பத்திர நிதி: 2021 முதல் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக, 2019-2020 முதல் 2022-2023 வரையிலான 4 ஆண்டுகளில் ரூ.628.50 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 2019-2020ஆம் ஆண்டு மாநிலக் கட்சிகளுக்கு நிதியாக வழங்கப்பட்ட 3441.32 கோடி ரூபாயில் திமுக 45.5 கோடி, அதிமுக 6.05 கோடி நிதியும் தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது.
2020-21ஆம் நிதி ஆண்டு வழங்கப்பட்ட 325.06 கோடி ரூபாயில் திமுக 80 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது. கடந்த 2021 - 22ஆம் நிதியாண்டில், 36 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் 1,213 கோடி ரூபாய். இதில் அதிகபட்சமாக 318 கோடி ரூபாயை திமுக நன்கொடையாக பெற்றுள்ளது.
2022-2023ஆம் ஆண்டை பொறுத்தவரை, திமுக, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 185 கோடி நன்கொடை பெற்றுள்ளது, அந்தவகையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் 2022ஆம் ஆண்டு வரை ரூ.628.50 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது திமுக.
சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு: தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6க்குள் வழங்க வேண்டும். அதேபோல், நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications