தலைவர்கள் வீடுகளில் முடக்கம்... எப்படி கழிகிறது நேரம்.. சுவாரஸ்யமான தகவல்கள்
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் மார்ச் 31-ம் தேதி வரை அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்துசெய்துவிட்டு வீடுகளில் முடங்கியுள்ளனர்.
எப்போதும் பிஸியாக படை பரிவாரங்களுடன் வலம் வந்த இவர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போது கட்டாய ஓய்வில் உள்ளனர்.
அப்படி இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் வீடுகளில் எப்படி தங்கள் நேரத்தை கழிக்கின்றனர் என்பன பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

பேரன் பேத்தி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை தனது பேரன், பேத்திகளோடு அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். பிறகு செய்தி தொலைக்காட்சிகளை தொடர்ந்து கவனித்த வண்ணம் இருக்கும் அவர் அவ்வப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அலைபேசி மூலம் அழைத்து பேசுகிறார். மு.க.ஸ்டாலின் ஒரு நாள் கூட ஓய்வில் இருக்க விரும்பாதவர், சென்னையில் இருந்தால் கூட கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சி, அண்ணா அறிவாலயம், கொளத்தூர் தொகுதி என வலம் வருவார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்தி வைத்துள்ளார்.

தவிர்ப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தற்போது டெல்லியில் இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்னை வர திட்டமிட்டிருந்த அவர், திடீரென தனது பயணதிட்டத்தை ரத்து செய்து டெல்லியில் உள்ள இல்லத்திலேயே தங்கிவிட்டார். மார்ச் 31 வரை அவர் தமிழகம் வர வாய்ப்பில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர். மேலும், டெல்லியிலும் புத்தகம் வாசிப்பது, தொலைகாட்சிகள் மூலம் நடப்பு நிகழ்வுகளை அறிந்துகொள்வது என இருப்பதாகவும், வெளியிடங்களுக்கு அவர் செல்வதில்லை எனவும் தெரிவித்தனர்.

இன்ப அதிர்ச்சி
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தான் இருக்கிறார். வழக்கமான சந்திப்புகள் பயணங்கள் என எதுவும் இல்லாததால் வீட்டில் இருந்தபடியே வட்டார அளவிலான நிர்வாகிகளை கூட தொலைபேசியில் அழைத்து பேசி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். பல நிர்வாகிகளும் வாசனே நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவதால் அவர்கள் அகமகிழ்ந்து உள்ளனர்.

விளையாட்டு
பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனை பொறுத்தவரை தனது மகன்களுக்கு தாமே சமையல் செய்து பரிமாறுவது, புத்தகம் வாசிப்பது என தனது நேரத்தை செலவிடுகிறார். மேலும், பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளிலும் அவர் ஈடுபட்டு தனது நேரத்தை கழித்து வருகிறார்.

புத்துணர்வு
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் தங்கியிருக்கிறார். எப்போதும் பொதுக்கூட்டம், போராட்டம், என பிஸியாகவே ஓடிக்கொண்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக கிராமத்தில் இருந்து வருகிறார். அங்கு மண்மனம் மாறாத சமையல் உணவுகளுடன் புத்துணர்வு பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications