வருமான வரி விலக்கு வரம்பு உயர்வால் அரசுக்கு லாபம்? இதென்ன கணக்கு? நிதி வல்லுநர்கள் சொல்லும் மேட்டர்!
சென்னை: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதித் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
2025- 2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையின் கீழ் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாத சம்பளதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

12 லட்சம் வரை வரி விலக்கு
கடந்த 2019-ம் ஆண்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2023-ல் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால், மாத சம்பளதாரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசுக்கு இழப்பா?
அதேசமயம், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதன் காரணமாக மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாயில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
ஆனால், இந்த இழப்பு, அரசுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்கள் நிதி வல்லுநர்கள். வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால், மிச்சமாகும் பணத்தை மக்கள் தாராளமாக செலவு செய்வார்கள். இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துவிடும்.
பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன?
மாதத்துக்கு 1 லட்சம் வரை சம்பாதிக்கும் மாதச் சம்பளதாரர்கள் அதிகபட்சமாக ஓராண்டில் ரூ.60,000 வரை சேமிக்க முடியும். ஒருவருக்கு ரூ.10,000 வரை வரி சேமிக்க முடியும் என்றால் அவர் நிச்சயமாக ரூ.8,000 வரை செலவு செய்வார். இதன்மூலம் பல்வேறு வகைகளில் மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துவிடும்.
மேலும், இந்த வரி விலக்கு காரணமாக, மக்கள் செலவழிப்பதும் கூடும். வாகனங்கள், எலக்ட்ரானிக் பொருட்களில் அவர்களின் செலவுகள் இருக்கக்கூடும். அவற்றிற்கான வரிகள் அதிகம் என்பதால், அவை மூலம் மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துவிடும், எனவே, அரசுக்கு இந்த வரி விலக்கால் பெரிய அளவில் இழப்பு ஏற்படாது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
நிதி அமைச்சர் நிர்மலா சொன்னது
இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பேசியுள்ளார். வரி விலக்கு முன்பு ரூ.2.2 லட்சமாக இருந்தது, பின்னர் 2014-ல் ரூ.2.5 லட்சமாக மாறியது. 2019-ல் ரூ.5 லட்சமாகவும், பின்னர் ரூ.7 லட்சமாகவும், தற்போது ரூ.12 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
அதன் மூலம், ஒருவர் மாதம் சராசரியாக ரூ.1 லட்சம் சம்பாதித்தால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என அரசு கருதுகிறது. வருமான வரி அடுக்குகளை மறுசீரமைப்பதன் மூலம், சேமிக்கப்படும் பணம், நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவை மீண்டும் பொருளாதாரத்தில் சுழற்சியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
பாக்கெட்டில் அதிக பணம்
இப்போது ரூ. 8 லட்சம் சம்பாதிக்கும் ஒருவரின் பாக்கெட்டில் கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் அதிகமாக உள்ளது. 2014ல் ஒருவர் 8 லட்சம் சம்பாதித்திருந்தால் வரி ரூ.1 லட்சம்; இப்போது, பூஜ்ஜியம். ரூ. 12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர், 2014ல், ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும், ஆனால் இப்போது ஒரு ரூபாய் கூட செலுத்தத் தேவையில்லை. எனவே அவர்களின் பாக்கெட்டில் ரூ.2 லட்சம் அதிகம் இருக்கும். இதன் மூலம் பணப் புழக்கம் அதிகரிக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூர்தர்ஷனுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications