விறுவிறு பட்டியல்.. அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உருவெடுக்க காரணம் என்ன?
சென்னை: தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உருவெடுத்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது.
லோக் சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்கள் இன்று வெளியாகியுள்ளன. இதில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 5.91 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொகுதியில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர். சென்னையின் முக்கிய நகரங்களில் இல்லாத அளவுக்கு புறநகர் பகுதியான சோழிங்கநல்லூரில் மட்டும் வாக்காளர்கள் உயர்ந்துள்ளது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.

நிறுவனங்கள்
தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தங்கள் கல்வித் தகுதி, அனுபவத்துக்கேற்ப நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

ஈஸி வேலை
தற்போது தகவல் தொழில் நுட்பத் துறை என்பது அதீத வளர்ச்சி கண்டுள்ளது. நுனி நாக்கில் ஆங்கிலம், சமயோஜித புத்தி, கம்ப்யூட்டர் கோர்ஸுடன் ஒரு பட்டப்படிப்பு இருந்தால் போதும் ஐடி துறையில் ஈஸியாக நுழைந்துவிடலாம்.

புறநகர் பகுதிகள்
நவீன உலகில் எல்லாம் தொழில்நுட்பம் என்ற நிலைக்கு வந்துவிட்டதால் நிறுவனங்களும் பன்மடங்கு பெருகுகின்றன. இது போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் புறநகர் பகுதிகளில் அமைகின்றன. அந்த வகையில் சென்னையில் முக்கியமான பகுதி என்றால் தரமணி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், சிறுச்சேரி உள்ளிட்டவைகளாகும்.

சிறிய வீடு
இங்கு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகியுள்ளன. சோழிங்கநல்லூரில் சிறிய வீடு வைத்திருந்தாலும் அதை ஐடி நிறுவன ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டு கணிசமாக ஒரு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

முதலீடு
இன்னும் சிலரோ சோழிங்கநல்லூர், சிறுச்சேரி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பணியாற்ற புறநகர் பகுதிகளில் வீடு வாங்கி குடியேறுகின்றனர். இது போல் சொந்த வீடு வாங்குவது வருமான வரியில் விலக்கு பெறவும் இது உதவுகிறது. ஒரு முதலீடாகவும் ஆகிவிட்டது. இவர்களை கவரவே குறைந்த தொகையில் பல்வேறு ரியல் எஸ்டேட் அதிபர்களும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மக்கள்தொகை பெருத்துவிட்டது.

காரணம்
மக்கள் தொகை பெருத்து விட்டதால் இங்கு ஓட்டல்களும் அதிகரித்துவிட்டன. அப்போது சென்னைக்கு போனால் பிழைத்து கொள்ளலாம் என்று சொல்வார்கள் அல்லவா. அது போல் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றால் நிச்சயம் பிழைத்து கொள்ளலாம் என்ற அளவுக்கு வந்துவிட்டது. 10 ஆண்டுகளில் இந்த மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே வாக்காளர்களும் பெருக காரணமாகிவிட்டதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications