‛‛மண்வாசம்’’ பிடிக்குமா? மழையின்போது மண் வாசனை வருவது ஏன்? அட இவ்வளவு நாள் இது தெரியாமே போச்சே?
சென்னை: மழை பிடிப்பது போலவே, மழையின்போது வரும் மண்வாசனையும் பலருக்கும் பேவரைட்டாக உள்ளது. இப்படி மனதை கொள்ளை கொள்ளும் மண்வாசனை மழையின்போது எப்படி வருகிறது? என்பது உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் குறைந்து குளுகுளு சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலங்கள் உள்ளன. இதுதவிர கோடை காலத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

பூமியை வறண்டு விடாமல், மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்க இயற்கை கொடுக்கும் வரப்பிரசாதமான இந்த மழையை ரசிக்காதவர்கள் யாராவது உண்டா?. இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் ‛இல்லை' என்றே கூற வேண்டும். ஏனென்றால் சிறுவயது முதல் இன்றைய நாள் வரை நாம் அனைவரும் மழையை ரசித்து கொண்டே தான் இருக்கிறோம்.
மண்வாசனை: அதேபோல் தான் மழைக்கு முன்பும், பின்பும் வரும் மண்வாசனை நுகர்ந்து இருக்கிறீர்களா? அதாவது மழை காலத்தில் மண்ணில் இருந்து ஒரு மணம் கிளம்பும். இதுதான் அந்த மண்வாசனை. ஏறக்குறைய நம்மில் அனைவரும் இந்த மண்வாசனையை நுகர்ந்து இருக்கலாம். இதை நகரங்களை விட கிராமங்களில் வசித்தவர்கள், வசித்து வருபவர்கள் அதிகம் உணர்ந்து இருக்கலாம்.
3 காரணங்கள்: பொதுவாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மண்ணில் பொழியும் மழைக்கு முன்பு இந்த மண்வாசனை என்பது அதிகமாக வெளியே வரும். இந்த மண்வாசனையும் கூட மழையை போல் பலருக்கும் பிடித்ததாகவே இன்று வரை இருக்கிறது. சரி இந்த மண்வாசனை எப்படி வருகிறது? அதன்பின்னணி என்ன? என்று நம்மில் சிலர் யோசித்து இருக்கலாம். சிலர் யோசிக்காமல் கூட இருக்கலாம். அப்படி யோசித்த மற்றும் யோசிக்காதவர்களுக்காக தான் இந்த செய்தி. அதாவது மழைக்கு முன்பு வரும் மண்வாசனைக்கு பின்னணியில் 3 முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
முதல் காரணம்: பூமியில் உள்ள மண்ணில் நிறைய பாக்டீரியாக்கள் உள்ளன. இதில் ஆக்டினோமைசெட்ஸ் (Actinomycetes) எனும் பாக்டீரியாவும் ஒன்றாகும். இது நூலிழை பாக்டீரியா என அழைக்கப்படுகிறது. சூடான மற்றும் ஈரமான மண்ணில் இது வளரும். விலங்குகளில் உடல்களிலும் இது வசிக்கும் என்றாலும் அதிகமாக இருப்பது மண்ணில் தான். இந்த பாக்டீரியா ஜியோஸ்மின் (geosmin) எனும் பொருளை வெளியேற்றும். இது மண்ணில் படிந்து இருக்கும் நிலையில் மழைநீர் பட்டு வேதிவினை நிகழும். இந்த வேதிவினையின் காரணமாக மண்வாசனை வரும்.
2வது காரணம்: மண்ணில் பல தாவரங்கள் இருக்கின்றன. இந்த தாவரங்களில் இருந்து பல்வேறு எண்ணெய் போன்ற திரவங்கள் மண்ணில் படிகின்றன. மழையின்போது இந்த எண்ணெய் படிவங்கள் மழை நீரில் வேதிவினை புரியும்போது ஒருவித வாசனை வருகிறது. இதனை நாம் மண்வாசனை என்கிறோம்.
3வது காரணம்: வளிமண்டலத்தில் ஏராளமான வாயுக்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஓசோன் வாயு. இது குளோரின் வாயுவை போல் வாசனையை கொண்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும்போது இந்த ஓசோன் வாயு மழை நீரில் கரைந்து மண்ணை அடையும். இதனால் ஒருவித நறுமணம் வருகிறது. இதனையும் நாம் மண்வாசனை என்கிறோம். இந்த 3 விஷயங்கள் தான் மழையின்போது மண்வாசனை வீசுவதற்கான காரணங்களாகும்.












Click it and Unblock the Notifications