வடமாநிலத்தவர்கள் இல்லாவிட்டால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கும்.. கட்டுமான தொழிலாளர் சங்கம்
வடமாநிலத்தவர்கள் இல்லாவிட்டால் தொழில் முடங்கும்- கட்டுமான சங்கத்தினர்
சென்னை: வடமாநிலத்தவர்கள் இல்லாவிட்டால் தமிழகத்தில் தொழில் முடங்கும் என கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் முதல் பானிபூரி கடை வரையில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு அதிக பணி நேரம், குறைந்த கூலி கொடுக்கப்படுகிறது.
எனினும் அவர்களுடைய மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக குடும்பத்தினரை விட்டுவிட்டு பிழைப்பதற்காக வருகிறார்கள். பலர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ரேஷன் கார்டு வாங்கிக் கொண்டு குடும்பத்துடனும் செட்டில் ஆகியுள்ளார்கள்.

தமிழக அரசு
தமிழக அரசின் நலத்திட்டங்களையும் பெற்று பயனடைகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவின. வேறு சில சம்பவங்களின் வீடியோ காட்சிகளை தவறாக இணைத்து பொய்யான தகவல் பரவியதால் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

பீகார்
பீகார் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வீடியோ வெளியானதால் பீகார் சட்டசபையில் இது ஒலித்தது. மேலும் பீகார் அனைத்து கட்சி குழுவினர் தமிழகம் வந்து பார்த்துவிட்டு அது போல் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துவிட்டனர். இந்த நிலையில் திடீரென வடமாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கிறார்கள்.

விஷமிகள்
இதையும் விஷமிகள் சிலர், தமிழகத்தில் இருக்க பயந்து கொண்டு அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்படுகிறார்கள் என கிளப்பி விட்டனர். இதுகுறித்து வடமாநிலத்தவர்களிடம் கேட்ட போதுதான் அவர்கள் கூறுகையில், நாளை ஹோலி பண்டிகை என்பதால் குடும்பத்துடன் ஹோலி கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்கிறோம் என்றார்கள். மேலும் நாங்கள் ஏன் பயந்து கொண்டு போகிறோம், எங்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இருக்கிறதே என்றும் அவர்கள் கூறினார்கள்.

வடமாநிலத்தவர்கள்
இதுகுறித்து மேலும் சிலர் கூறுகையில் தமிழகத்தில் எங்களை வடமாநிலத்தவர்கள் என பார்ப்பதில்லை. எனவே தேவையில்லாமல் வதந்திகளை கிளப்ப வேண்டாம், சொந்த ஊர்களில் இருக்கும் குடும்பத்தினரும் நம்ப வேண்டாம். எங்களை அவர்களது குடும்பமாகவே தமிழக மக்கள் பாவிக்கிறார்கள். சிலர் தமிழகத்து பெண்களையும் ஆண்களையும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டனர். எனவே நாங்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பதைதான் உணர்கிறோம் என தெரிவித்தனர்.

தொழில் வளர்ச்சி
இதுகுறித்து கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கூறுகையில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு வடமாநிலத்தவர்கள் தேவைப்படுகிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் சிமெண்ட் கவர் தயாரிப்பு பாதிக்கப்படும் என்றார். தமிழகத்தில் பல ஆண்டுகளாக நிறைய வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். அவர்களால் தமிழர்களுக்கும், தமிழர்களால் அவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்பட்டதில்லை என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications