நாட்டையே அதிர வைத்த சிஏஏ போராட்டம்.. 31 பேர் உயிரை விட்டார்களே? முடிவுக்கு கொண்டு வந்த கொரோனா!
சென்னை: நாடு முழுவதும் தீவிரமான போராட்டங்களை ஏற்படுத்தி இருந்த சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. நாட்டையே அதிர வைத்த சி.ஏ.ஏ போராட்டங்கள், கொரோனா பரவல் காரணமாகவே அப்போது ஓய்ந்திருந்தன.
மத்திய பாஜக அரசு, 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதும், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) வை கொண்டு வந்தது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 2019 டிசம்பரில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அன்றைய குடியுரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் உடடினயாக ஒப்புதல் அளித்தார்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த இந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ சட்டம் வழிவகை செய்யும். இருப்பினும் இதில் முஸ்லிம்கள் பற்றி எந்த விபரமும் குறிப்பிடப்படவில்லை.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. தலைநகர் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பெரும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், சிறு நகரங்களிலும் போராட்டம் பரவியது. இந்தப் போராட்டங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் நாடு முழுவதும் பலர் உயிரிழந்தனர். இந்தப் போராட்டம் மத்திய பாஜக அரசுக்கு அச்சுறுத்தலாகவும் மாறியது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வந்த நிலையில், சட்டத்தைத் திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு தெரிவித்து வந்தது. சிஏஏ சட்ட நகல் எரிப்பு போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன. நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு திணறியது.
இந்த நிலையில், திடீரென கொரோனா பெருந்தொற்று பரவல் தீவிரம் அடைந்ததால், சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு சி.ஏ.ஏ விவகாரத்தில் அமைதி காத்து வந்த மத்திய பாஜக அரசு மீண்டும் சி.ஏ.ஏ சட்டம் குறித்த பணிகளை தீவிரப்படுத்தி வந்தது. கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சி.ஏ.ஏ சட்டம் நிச்சயமாகக் கொண்டு வரப்படும், அதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசினார்.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாகவே குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என மத்திய பாஜக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சிஏஏ சட்டத்தை அமல் படுத்தியுள்ளது மத்திய அரசு. அதன்படி சிஏஏ சட்டம் அமலுக்கு வருவதாக அரசிதழில் வெளியானதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலின்போது குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து தேர்தல் வாக்குறுதியை பாஜக அளித்திருந்தது. அதனை 2024ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன் அமல்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடும் எதிர்ப்பையும், போராட்டங்களையும் ஏற்படுத்தி இருந்த இந்தச் சட்டம், தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications