திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை.. டீக்காராம் சிக்கியது எப்படி.. போலீஸுக்கு கிடைத்த முக்கிய துப்பு!
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டரில் பணியாற்றுபவர் டீக்காராம். இவரை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டி போட்டு ரூ 1.32 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து திருவான்மியூர் ரயில்வே போலீஸார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் வைரவன், ஷாலினி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கொள்ளை
ரயில்வே ஊழியர் டீக்காராமிடம் கொள்ளை எப்படி நடந்தது என போலீஸார் விசாரித்தனர். அப்போது ரயில் நிலையத்திற்கு மூன்று பேர் வந்ததாகவும் துப்பாக்கியை காட்டி மிரட்டி தனது கை, கால்களை கட்டி போட்டு கொள்ளையடித்துவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார். ஆனால் கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை.

சிசிடிவி பதிவுகள்
இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்ததால் பயணிகளின் நடமாட்டமும் இல்லை. அதனால் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போதுதான் டீக்காராமின் மனைவி அந்த அதிகாலை நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

டீக்காராம்
இதுகுறித்து டீக்காராமிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது மனைவி ரயில் நிலையத்திற்கே வரவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து டீக்காராமிடம் சிசிடிவி காட்சிகளை போலீஸார் காண்பித்தனர். அப்போது அவர் பதற்றமடைந்து எதை எதையோ உளறினார். இதையடுத்து டீக்காராமை போலீஸார் விசாரிக்கும் விதத்தில் விசாரித்தனர்.

ரயில்வே ஊழியர் மனைவியுடன் கைது
அப்போது அவர் நிலையத்துக்கு தனது மனைவி வந்ததை ஒப்புக் கொண்டார். அதன்பின்னர்தான் இந்த வழக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் பணத்தேவையை பூர்த்தி செய்ய இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது. 1.32 லட்சம் ரூபாயை மனைவியிடம் கொடுத்துவிட்டு தன்னை அவரைவிட்டே கட்டி போட்டுவிட்டு செல்லும் படியும் டீக்காராம் சொன்னதை போலீஸிடம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications