Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்காளர் அடையாள அட்டை-ஆதார் கார்டு இணைப்பது எப்படி? அனைவரும் செய்ய வேண்டுமா? முழு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் UIDAI ஆகிய உயர் அதிகாரிகளுக்கிடையே உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் இந்த முடிவை வரவேற்றுள்ளன. போலி வாக்காளர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

voter id aadhar card

தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன?

தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் உயர்மட்டக் கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைக்க ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவுகளை நீக்குவதும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும்தான் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செயல்முறையைத் தொடங்குவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் விரைவில் UIDAI மற்றும் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே ஆரம்பிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் பணிந்ததா?

இந்த முடிவு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் முயற்சியால் எடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. போலி வாக்காளர்கள் குறித்த காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாகவும், இதன் மூலம் வாக்கு மோசடிகளைத் தடுக்க முடியும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) பக்கத்தில், "காங்கிரஸ் மற்றும் INDIA கூட்டணி தொடர்ந்து வாக்காளர் பட்டியல்களில் உள்ள குளறுபடிகள், அதிகப்படியான வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல் மற்றும் இரட்டை வாக்காளர் அடையாள அட்டைகள் குறித்து குரல் எழுப்பி வந்துள்ளது. ஆதாரை இணைப்பதன் மூலம் இரட்டை வாக்காளர்களின் சிக்கலைத் தீர்க்க முடியும். ஆனால் ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு இந்த இணைப்பு செயல்முறையில் சிரமங்கள் இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5 மாதங்களில் மட்டும் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 32 லட்சம் வாக்காளர்களே சேர்க்கப்பட்டதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த வயது வந்த குடிமக்களின் எண்ணிக்கையை விட அதிகமாகிவிட்டது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் இரட்டை வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்து அழுத்தத்தில் இருந்தது உண்மைதான். ஆனால், இது மட்டுமே இந்த முடிவுக்கு காரணம் என்று உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில், 2015 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டது.

2021 ஆம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இல் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க அனுமதி கிடைத்தது. இதற்காக தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடமிருந்து ஆதார் அட்டை விவரங்களை சேகரிக்கத் தொடங்கியது. இருப்பினும், ஆணையம் இதுவரை இரண்டு தரவுத்தளங்களையும் இணைக்கவில்லை.

voter id aadhar card

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைப்பது எப்படி?

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைக்க (How to Link Voter ID with Aadhar) புதிய வாக்காளர்கள் படிவம் 6 ஐயும், பழைய வாக்காளர்கள் படிவம் 6B ஐயும் நிரப்ப வேண்டும். இதில் வாக்காளர்களுக்கு இரண்டு சாய்ஸ்கள் உள்ளன:

  • தங்களது ஆதார் எண்ணை வழங்கலாம்.
  • தங்களிடம் ஆதார் அட்டை இல்லை என்று தெரிவிக்கலாம்.

யாரிடமாவது ஆதார் அட்டை இல்லையென்றால், அவர்கள் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது வங்கி பாஸ்புக் போன்ற பிற ஆவணங்களை வழங்கலாம்.

அனைத்து வாக்காளர்களும் ஆதாரை இணைக்க வேண்டுமா?

2023ம் ஆண்டு செப்டம்பரில், உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் ஆதார் வழங்குவது கட்டாயமில்லை என்று கூறியிருந்தது. 66.23 கோடி வாக்காளர்கள் தாங்களாக முன்வந்து தங்கள் ஆதார் எண்களை சமர்ப்பித்துள்ளனர். ஆதார் அட்டையை வாக்காளர் பட்டியலுடன் இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியின்படி, இனி எந்த வாக்காளரும் தனது ஆதார் அட்டையை வழங்கவில்லை என்றால், படிவம் 6B இல் அதற்கான சரியான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டும். இந்த மாற்றம் சட்ட அமைச்சகத்தால் விரைவில் அரசிதழ் அறிவிப்பின் மூலம் மேற்கொள்ளப்படும். இந்த மாற்றம் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதால் என்ன நன்மைகள்?

voter id aadhar card

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைப்பதால் வாக்காளர்களுக்கு 4 முக்கிய நன்மைகள் கிடைக்கும்:

  • எளிதான பதிவு செயல்முறை: வாக்காளர்கள் தங்கள் ஆதார் அட்டையின் மூலம் எளிதாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க முடியும். காகித நடைமுறைகள் இல்லாமல் முகவரியை மாற்றலாம் அல்லது புதிய அடையாள அட்டையைப் பெறலாம்.
  • எளிதான சரிபார்ப்பு செயல்முறை: வாக்குச் சாவடியில் அடையாள சரிபார்ப்பு எளிதாகவும் வேகமாகவும் இருக்கும். இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.
  • போலி வாக்களிப்பிலிருந்து பாதுகாப்பு: ஆதார் இணைப்பு போலி வாக்களிப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கும். வாக்காளர்களின் வாக்குகள் சரியான முறையில் பதிவு செய்யப்படும்.
  • ஒரே இடத்தில் விவரங்கள்: வாக்காளர் பட்டியலில் பெயர் அல்லது முகவரி போன்ற ஏதேனும் பிழைகள் இருந்தால், ஆதார் இணைக்கப்பட்டவுடன் அதை சரி செய்வது எளிதாக இருக்கும். எல்லா விவரங்களும் ஒரே இடத்தில் சேகரிக்கப்படும்.

வாக்காளர் அடையாள அட்டையை இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைக்காததால் வாக்காளருக்கு நேரடி பாதிப்பு எதுவும் இருக்காது. வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை. அரசாங்கம் அதை பறிக்க முடியாது என்று அரசியல் நிபுணர் விஜய் திரிவேதி கூறுகிறார். ஆதார் எண் கொடுக்காத காரணத்தால் யாரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மறுக்கவோ அல்லது நீக்கவோ முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரை இணைப்பதால் போலி வாக்களிப்பு எப்படி குறையும்?

தேர்தல் ஆய்வாளர் அமிதாப் திவாரி கூறுகையில், "வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதன் மூலம் போலி வாக்களிப்பை குறைக்க முடியும். இந்த நடைமுறைக்குப் பிறகு எந்தவொரு நபருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் இருக்க முடியாது."

உதாரணமாக, நீங்கள் ஒரு கிராமத்தில் வசிக்கிறீர்கள், அங்குள்ள முகவரியில் உங்களுக்கு ஆதார் அட்டையும் வாக்காளர் அட்டையும் உள்ளது. அதாவது அந்த பகுதியில் நீங்கள் வாக்களிக்கலாம். பின்னர் நீங்கள் சில காரணங்களால் புதிய கிராமம் அல்லது நகரத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால், ஆதாரிலும் புதிய முகவரியைப் புதுப்பிக்கிறீர்கள். இதனால் உங்கள் வாக்காளர் அட்டையும் புதிய முகவரியுடன் புதுப்பிக்கப்படும். ஆனால் பல சமயங்களில் உங்கள் பழைய கிராமத்து முகவரியின் வாக்காளர் அட்டை செயலிழக்காது. அதாவது உங்களிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்கும். ஒன்று கிராமத்திலும் மற்றொன்று நகரத்திலும் இருக்கும். இதனால் அவர் இரு இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஓட்டு போடும் நிலை இருந்தது.

அமிதாப் திவாரி மேலும் கூறுகையில், "புதிய நடைமுறையின் மூலம் இதுபோன்ற பிரச்சினைகள் நீக்கப்படும். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டவுடன், பழையது தானாகவே செயலிழந்துவிடும். இதனால் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து, ஒரு நபருக்கு ஒரு ஆதார் மற்றும் ஒரு வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே இருக்கும்."

voter id aadhar card

2015 ஆம் ஆண்டைப் போல மீண்டும் தடை விதிக்கப்படுமா?

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைக்க தேர்தல் ஆணையம் இதற்கு முன்பும் முயற்சி செய்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் மார்ச் 2015 முதல் ஆகஸ்ட் 2015 வரை தேசிய வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு திட்டத்தை (NERPAP) நடத்தியது. அந்த நேரத்தில் தேர்தல் ஆணையம் 30 கோடிக்கும் அதிகமான வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதாரோடு இணைக்கும் செயல்முறையை முடித்திருந்தது. ஆனால் நீதிபதி ஜே. செல்லமேஸ்வர், நீதிபதி எஸ். ஏ. போப்டே மற்றும் நீதிபதி சி. நாகப்பன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த நடைமுறைக்கு தடை விதித்தது.

உண்மையில், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைக்கும் செயல்முறையின் போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுமார் 55 லட்சம் மக்களின் பெயர்கள் வாக்காளர் தரவுத்தளத்திலிருந்து நீக்கப்பட்டன. ஆதாரின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதாரை இணைக்க தடை விதித்தது. இதில் மிக முக்கியமான மனு 2012 இல் நீதிபதி (ஓய்வு) கே.எஸ். புட்டசுவாமியால் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் இந்த தடைக்கு 3 காரணங்களைக் கூறியது...

voter id aadhar card
  • ஆதார் அட்டை தரவுகளுடன் இணைப்பது பொதுமக்களின் தனிப்பட்ட உரிமை மீறலுக்கு வழிவகுக்கும். இது தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
  • ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதால் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படலாம். சிலருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படலாம். இந்த அம்சத்தையும் உச்ச நீதிமன்றம் பரிசீலித்து, இணைப்புக்கான தேவைகளை தெளிவுபடுத்த அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
  • ஆதார் தனிநபரின் விருப்பத்தின் பேரில் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர கட்டாயமாக இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. பொது விநியோக முறை (PDS) மற்றும் எல்பிஜி மானியம் போன்ற சில நலத்திட்டங்களுக்கு மட்டுமே ஆதாரைப் பயன்படுத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்தியது.

செப்டம்பர் 26, 2018 அன்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு சில நிபந்தனைகளுடன் ஆதார் சட்டத்தை செல்லுபடியாக்கினர். நீதிமன்றம் தனிப்பட்ட உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது, ஆனால் நலத்திட்டங்களுக்கு ஆதாரைப் பயன்படுத்த அனுமதித்தது. தனியார் நிறுவனங்கள் ஆதாரைப் பயன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதன் பின்னர், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைக்கும் திசையில் அரசாங்கம் மீண்டும் நடவடிக்கை எடுத்தது. இதற்காக, டிசம்பர் 2021 இல், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைக்கும் வகையில் நாடாளுமன்றம் RP சட்டம் மற்றும் வாக்காளர் பதிவு விதிகள் 1960 இல் திருத்தம் செய்தது.

இந்த திருத்தங்களை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா 2022 இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. செப்டம்பர் 2023 இல், ஆதார் வழங்குவது கட்டாயமில்லை என்றும், படிவத்தில் மாற்றம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது. படிவம் 6B இல் மாற்றம் செய்து வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைப்பை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாத வகையில் அரசு மேற்கொள்ளும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+