ஏசி விடிய விடிய ஓடுதா? மின் கட்டணத்தில் ஈஸியா 36% வரை சேமிக்கலாம்.. மின்வாரியம் தந்த அசத்தல் ஐடியா!
சென்னை: கோடை வெயில் அதிகமாக இருப்பதால் வீட்டில் விடிய விடிய ஏசி பயன்பாட்டில் இருக்கலாம். இதனால் மின்கட்டணம் அதிகமாகும். இந்நிலையில் தான் விடிய விடிய ஏசியை பயன்படுத்தினாலும் கூட எளிதாக 36 சதவீதம் வரை மின்கட்டணத்தை சேமிப்பதற்கான சூப்பர் ஐடியாவை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தந்துள்ளது. அந்த ஐடியா என்ன? வாங்க பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக வெப்பநிலை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்பிறகு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. மேலும் பல மாவட்டங்களில் வெப்ப அலை வீச தொடங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் தற்போதைய மே மாதத்தில் கத்திரி வெயில் தொடங்கி உள்ளது. கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் காலம் தொடங்கி விட்டது. இந்த கத்திரி வெயில் மே 28 ம் தேதி வரை மொத்தம் 25 நாட்கள் வரை நீடிக்கும். தற்போது கத்திரி வெயில் தொடங்கினாலும் கூட பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஓரளவு மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இருப்பினும் கூட இன்னும் சில நாட்கள் கழித்து மீண்டும் கத்திரி வெயிலால் நாம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் கடந்த மாதத்தை போல் நம் வீடுகளில் ஃபேன் மற்றும் ஏசி இல்லாமல் இருக்க முடியாத சூழல் உருவாகலாம். பொதுவாக ஏசியை பயன்படுத்தும்போது நமக்கு அதிகப்படியான மின்சாரம் செலவாகும். இதனால் மின்கட்டணமும் வழக்கத்தை விட அதிகமாக வரும்.
இந்த மின்கட்டணத்தை குறைப்பது என்பது பலருக்கும் சவாலான காரியமாகும். ஏனென்றால் கோடை வெயிலில் ஏசி என்பது தொடர்ந்து பயன்படுத்தப்படும். இதனால் மின்கட்டணம் கணிசமான அளவில் உயரும். ஆனால் ஏசி பயன்படுத்தும்போது இந்த ஒரு செயலை செய்தால் எளிதாக மின்கட்டணத்தில் 36 சதவீதம் வரை சேமிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் இது முற்றிலும் உண்மை.
இந்த அட்வைஸை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் (TANGEDGo) தான் தந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‛‛உங்கள் AC-யை 24-26 டிகிரி செல்சியஸில் வைப்பதன் மூலம் 36% மின்கட்டணத்தை சேமிக்கலாம். இன்றே உறுதி செய்திடுங்கள். பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் நிலையான சூழலை உருவாக்க முடியும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கோடை வெயில் அதிகமாக இருக்கிறது என்று நாம் வீடு மற்றும் அலுவலகத்தில் ஏசியை 18 டிகிரி செல்சியஸ் அளவில் வைத்து பயன்படுத்துவோம். இந்த 18 டிகிரி செல்சியஸ் அளவில் ஏசியை பயன்படுத்தும்போது அந்த அறை மிகவும் குளிர்ச்சியாக மாறி நம்மை வெப்பத்தில் இருந்து காக்கும். ஆனால் உண்மையில் 18 டிகிரி செல்சியஸில் ஏசி பயன்படுத்தும்போது அது அதிகப்படியான மின்சாரத்தை எடுத்து கொள்ளும். இதனால் மின்கட்டணம் என்பது நமக்கு அதிகரிக்கும்.
அதேவேளையில் ஏசியை 24-26 டிகிரி செல்சியஸில் பயன்படுத்தினால் மின்சார பயன்பாடு என்பது குறையும். இதன்மூலம் நாம் மின்கட்டணத்தை சேமிப்பதோடு, ஏசியின் குளிரையும் அனுபவிக்கலாம். இருப்பினும் கூட 24-26 டிகிரி செல்சியஸில் ஏசி பயன்படுத்தும்போது வரும் கூலிங்கான சூழல் 18 டிகிரி செல்சியஸில் பயன்படுத்துவதை விட குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications