நாய் வளர்க்குறீங்களா! வெளியூர் போனாலும் ரயிலில் கூட்டி போக சூப்பர் வழி இருக்கு.. இது தெரியாம போச்சே
சென்னை: நாய்களைப் போல ஒரு நன்றியுள்ள, நமக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒன்றை நம்மால் பார்க்கவே முடியாது. பாசமாக வளர்க்கும் நாயை வெளியூர் செல்லும் போது பிரிய வேண்டும் என்பதே பலருக்கும் கஷ்டம்.. ஆனால், கவலை வேண்டாம் ரயிலில் வெறும் சில நூறு ரூபாய் செலவில் உங்கள் செல்ல பிராணியை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல வழி இருக்கு. அது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த நகரத்து வாழ்க்கை மிகவும் பரபரப்பானதாக மாறிவிட்டது. காலையில் அவசர அவசரமாக ஆபீஸ் சென்றால் வீடு திரும்பவே நள்ளிரவு ஆகிவிடுகிறது. இதனால் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதே கூட பலருக்கும் தெரிவதில்லை.

அந்தளவுக்கு வாழ்க்கை பரபரப்பாக மாறிவிட்ட நிலையில், வீட்டில் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கப் பலரும் செல்ல பிராணிகளை வாங்குகிறார்கள். அதிலும் மக்கள் விரும்பி வாங்கும் செல்ல பிராணியாக இருப்பது நாய்கள் தான்.
வெளியூர்: அப்படி நாய்களை வாங்குவோர் கிட்டதட்ட குழந்தையைப் போல.. சிலர் குழந்தையை விடவும் அதிக பாசம் கொட்டி வளர்ப்பார்கள். நாய் வளர்ப்பதால் அவர்களால் வெளியூர்களுக்கு கூட செல்ல முடியாத சூழல் ஏற்படும். ஏனென்றால் வெளிநாடுகளைப் போல நமது நாட்டில் எல்லா இடங்களுக்கும் எல்லாம் நாய்களை அழைத்துச் செல்ல முடியாது.
சொந்தமாக கார் இருந்தால் மட்டுமே நாய்களை வெளியூர் அழைத்துச் செல்ல முடியும் என்ற சூழலே இருந்தது. இதனால் கார்கள் இல்லாத நடுத்தர வர்க்கத்தினரால் நாய்களை எங்கும் அழைத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், இப்போது கடந்த சில ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. ரயில்கள் மூலமாகவே நாய்களை அழைத்துச் செல்ல நமக்கு வழி இருக்கிறது. அது பலருக்குத் தெரிவதில்லை அது குறித்து நாம் பார்க்கலாம்.
2 வழி இருக்கு: ரயில்களில் நாய்களை அழைத்துச் செல்ல 2 ஆப்ஷன்கள் உள்ளன. உங்களுடன் நாயை அழைக்குச் செல்ல வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயம் முதலாம் வகுப்பு ஏசி டிக்கெட் புக் செய்ய வேண்டும். அதிலும் கூபே (coupe) டிக்கெட் இருக்க வேண்டும். கூபே என்பது ரயில் முதல் வகுப்பில் இருக்கும் வகை.. இதில் இரு பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். நீங்கள் முதலாம் வகுப்பில் இரண்டு டிக்கெட் புக் செய்தால் பெரும்பாலும் கூபே தான் ஒதுக்கப்படும். அதேநேரம் கட்டாயம் கூபே தான் கிடைக்கும் என்று இல்லை.
கூபே டிக்கெட் இல்லை என்றால் ரயிலில் உங்களுடன் செல்லி பிராணியை அழைத்துச் செல்ல முடியாது. எனவே, ரயில் கிளம்புவதற்கு முந்தைய நாள் நாங்கள் செல்ல பிராணியைக் கூட்டிச் செல்கிறோம்.. இதனால் கூபே டிக்கெட் வேண்டும் எனக் கோரிக்கை கடிதத்தை ரயில்வே அலுவலகத்தில் சமர்ப்பியுங்கள்.. இதன் மூலம் உங்களுக்கு கூபே கிடைப்பது உறுதியாகும். முதலாம் வகுப்பைத் தவிர வேறு எந்த டிக்கெட் புக் செய்தாலும் செல்ல பிராணியை உடன் அழைத்துச் செல்ல முடியாது.
பிரேக் வேன்: அடுத்து 2வது முறை பிரேக் வேன் அல்லது ரயிலின் லக்கேஜ் வேனில் செல்ல பிராணிகளை அனுப்பலாம்.. அது என்ன என்று குழம்ப வேண்டாம். ரயிலின் கடைசி பெட்டி.. அதில் நாய்க்கு தனியாக ஒரு கூண்டு இருக்கும். அதில் செல்ல பிராணியை அனுப்பலாம்.. இதில் சில கண்டிஷன்கள் உள்ளன. முதலில் நாய் அழைத்துச் செல்லும் நபரும் அந்த ரயிலில் பயணிக்க வேண்டும்.
அவரால் பிரேக் வேனில் செல்ல பிராணியுடன் இருக்க முடியாது.. ஆனாலும், அவர்கள் ரயிலில் நிச்சயம் இருக்க வேண்டும். சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டி முதல் ஏசி வரை எதில் பயணித்தாலும் ஓகே.. கன்பார்ம் டிக்கெட் மட்டும் இருந்தால் போதும்.
எங்கு செல்லணும்: இரண்டு வழிகளில் எப்படி அனுப்ப வேண்டும் என்றாலும் சரி, நீங்கள் ரயில் புறப்படக் குறைந்தது 2- 3 மணி நேரத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட ரயில்வே நிலையத்திற்கு நேரில் செல்ல பிராணிகளுடன் செல்ல வேண்டும். இதை நீங்கள் ஆன்லைனில் புக் செய்ய ஆப்ஷன் இல்லை. அங்குள்ள பார்சல் ஆபீசில் செல்ல பிராணியுடன் செல்ல வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: பயணியின் கன்பாஃர்ம் டிக்கெட், ஆதார் அட்டை ஆகியவற்றின் ஜெராக்ஸ் தேவை. வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை ஏற்க மாட்டார்கள். கன்ஃபார்ம் ஆகி சீட் நம்பருடன் இருக்க வேண்டும். மேலும், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு செல்ல பிராணிக்கு ஃபிட்னஸ் சான்றிதழ் வாங்க வேண்டும். நீங்கள் வழக்கமாகச் செல்ல பிராணியை அழைத்துச் செல்லும் மருத்துவமனையிலேயே இதைப் பெறலாம். இது தவிர நாய்க்கான தடுப்பூசி புக் ஜெராக்ஸ் வேண்டும். அதில் கடந்த ஓராண்டிற்குள் ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசியைப் போட்டதற்கான ரெக்கார்ட் இருக்க வேண்டும்.
இந்த ஆவணங்களுடன் பார்சல் ஆபீஸ் சென்றால் போதும். அவர்களை சில நிமிடங்களில் புக் செய்து, ஒரு ரசீதைத் தருவார்கள். அதை வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் செல்ல பிராணியை உடன் அழைத்துச் செல்லலாம். பிரேக் வேனில் அனுப்பினாலும் நாய்க்கு சாப்பாடு தருவது, தண்ணீர் தருவது எல்லாம் உங்கள் பொறுப்பு தான்.. எனவே, அவ்வப்போது ரயில் நிலையங்களில் அதையும் செக் செய்து கொள்ளுங்கள். இந்த பிரேக் வேனில் செல்ல பிராணியை அனுப்பினால் சில நூறு ரூபாய் மட்டும் ஆகும்.
உங்கள் செல்ல பிராணியை அழைத்துச் செல்ல இந்த சூப்பர் வழி இருப்பதால்.. அடுத்த முறை வெளியூர் எங்குச் சென்றாலும் உங்கள் செல்ல பிராணியை உடனேயே அழைத்துச் செல்லுங்கள்.












Click it and Unblock the Notifications