கடைசி நொடி வரை.. ஸ்டாலினிடம் உண்மையை மறைத்த உளவுத்துறை.. நிஜம் தெரியாத ஜாம்பவான்கள்.. என்ன நடந்தது?
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் இதுவரை நிலவி வந்த அத்தனை தர்க்கங்களையும் தவிடுபொடியாக்கியுள்ளன. அரசியல் ஆய்வாளர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், ஏன்... மாநிலத்தின் ஒட்டுமொத்த உளவுத்துறை கூடக் கணிக்கத் தவறிய ஒரு வரலாற்றுச் சாதனையைக் குறுகிய காலத்தில் படைத்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.
அறிவாலயத்தை அதிரவைத்த 'கவுண்டிங்' நாள் அதிர்ச்சி
வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி காலை வரை, தி.மு.க. தலைமை அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தது. 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதியாக நம்பியிருந்தார். இதற்காக அறிவாலயத்தில் "திராவிட மாடல் 2.0" என்ற வாசகத்துடன் பிரம்மாண்டமான டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு, அடுத்த ஐந்தாண்டு ஆட்சியின் சிறப்பம்சங்களை ஒளிபரப்பத் தயாராக இருந்தனர்.

ஆனால், காலை 10 மணிக்கே நிலவரம் தலைகீழாக மாறியது. கொளத்தூர் முதல் குமரி வரை தவெக அலை வீசுவதைக் கண்டு திகைத்துப்போன தி.மு.க. நிர்வாகம், அவசர அவசரமாக அந்த டிஜிட்டல் திரைகளை அங்கிருந்து அகற்றியது. "மீண்டும் வெற்றி" என்ற முழக்கம் "தோல்விக்கான காரணம் என்ன?" என்ற தேடலாக மாறியது அறிவாலயத்தில் அரங்கேறிய மிகப்பெரிய சோகமாகும்.
தோற்றுப்போன உளவுத்துறை: ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட போலித் தரவுகள்
இதில் அதிகம் கவனிக்கப்படுவது மாநில உளவுத்துறையின் படுதோல்விதான். ஒரு முதலமைச்சர் முழுமையாகத் தனது மாநில உளவுத்துறையையும், அதன் அறிக்கைகளையுமே நம்பியிருப்பார். ஆனால், தவெக-வின் வாக்கு வங்கி இத்தனை வலுவாக இருப்பதை உளவுத்துறை ஸ்டாலினுக்குத் தெரிவிக்கவே இல்லை.
தவெகஅதிகபட்சமாக 10 முதல் 20 இடங்களைப் பிடிக்கலாம் என்றே பெரும்பாலான அறிக்கைகள் கூறின. உளவுத்துறை மட்டுமல்லாது, ஸ்டாலினைச் சுற்றியிருந்த ஒரு சில 'நிழல் அதிகார' மையங்கள், தரைமட்ட நிலவரத்தை அவரிடம் கொண்டு செல்லாமல் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்திருந்தனர். இதனால், தேர்தல் வியூகங்களை மாற்றி அமைக்க முடியாமல் தி.மு.க. கோட்டை விட்டுள்ளது. கொளத்தூரில் அவருக்கு எதிராக அதிருப்தி இருப்பதை கூட சொல்லாமல் விட்டுள்ளனர்.
ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) - மட்டுமே கணித்த வெற்றி!
இந்தத் தேர்தலில் தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்களும், கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் "விஜய் கட்சிக்கு 15 இடங்கள் கிடைக்கும்," "வாக்குகளைப் பிரிப்பார்" என்றே கூறின. ஆனால், பிரதீப் குப்தாவின் Axis My India மட்டுமே தனித்து நின்று, தவெக 100 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று துணிச்சலாகக் கணித்தது.
மற்ற நிறுவனங்கள் 'டேட்டா' என்ற பெயரில் மேலோட்டமான முடிவுகளை வெளியிட்டபோது, கள ஆய்வின் மூலம் மக்களின் அடிமனதில் இருந்த மாற்றத்தை ஆக்சிஸ் மை இந்தியா மட்டுமே சரியாகப் படம் பிடித்துக் காட்டியது. நேற்று முடிவுகள் வெளியான பிறகு, அந்த நிறுவனம் சொன்னது அப்படியே பலித்துள்ளது.
யார் இந்தத் தோல்விக்குப் பொறுப்பு?
மக்களின் நாடித் துடிப்பை உணராமல், "திராவிட மாடல்" என்ற பிம்பத்திற்குள் மட்டுமே தி.மு.க. மூழ்கிக்கிடந்ததே இந்த வீழ்ச்சிக்குக் காரணம். இளைஞர்களின் எதிர்பார்ப்பு, புதிய மாற்றத்திற்கான வேட்கை ஆகியவற்றை உளவுத்துறையும், மூத்த தலைவர்களும் முதல்வரிடம் கொண்டு செல்லத் தவறிவிட்டனர்.
200 இடங்களை வென்று புதிய வரலாறு படைக்கக் காத்திருந்த தி.மு.க-விற்கு, 107 இடங்களுடன் தவெக கொடுத்திருக்கும் இந்த அடி, வரும் காலங்களில் கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications