சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறுவனை கடத்திய ஆந்திர பெண்கள்.. சிக்க வைத்த சின்ன விஷயம்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சஜிதா பேகம் என்பவரின் 6 வயது மகன் சபீக் உதீன் என்பவர் மாயமானார்.. இதில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கடத்தி சென்றவர்களை தனிப்படை அமைத்து தேடினார்கள். குண்டூரில் 14 நாட்களுக்கு பிறகு மீட்டனர். சிறுவன் கடத்தலில் ஆந்திர பெண்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த சஜிதா பேகம், தன்னுடைய 6 வயது மற்றும் 3 வயது மகன்களுடன் கடந்த ஜனவரி 12-ந்தேதி சென்னைக்கு வந்தார். பிழைப்புத் தேடி பயணித்து வந்த சஜிதா பேகம், சென்னையில் உள்ள காய்கறி கடையில் வேலைக்கு சேர்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார். ஆனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறிது நேரத்திலேயே சஜிதா பேகமின் 6-வது மகன் சகிப் உதீன் திடீரென மாயமானார். இதுகுறித்து, சஜிதா உடனடியாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார், ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்கள். அப்போது, சிறுவன் சகிப் உதீனை 5 பெண்கள் அந்த சிறுவனை கடத்தி சென்றது தெரியவந்தது. அந்த பெண்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 14 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, கடந்த 26-ந்தேதி ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் நரசராவ்பேட்டை அருகே சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டார்கள்.
சிறுவனை கடத்தியது தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதாகும் சரஸ்வதி, அவருக்கு உடந்தையாக இருந்த 36 வயதாகும் சஜ்ஜாவதி, 48 வயதாகும் வீரன் அஞ்சம்மா, 37 வயதாகும் உமா, 40 வயதாகும் அஞ்சம்மாள் ஆகிய 5 பேரையும் சென்ட்ரல் ரயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி வெளியான தகவலின்படி, ஆந்திராவைச் சேர்ந்த சரஸ்வதி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் வியாசர்பாடி, பெரம்பூர், வில்லிவாக்கம் உள்பட பல்வேறு ரயில் நிலையங்களுக்கு சென்று பிச்சை எடுப்பது போல நடித்து அங்கு தனியாக சுற்றித்திரியும் குழந்தைகளை நோட்டமிட்டிருக்கிறார்கள். குழந்தைகளை கடத்தி சென்று பிச்சை எடுத்து வளர்க்க இந்த கும்பல் திட்டமிட்டிருக்கிறார்கள். சம்பவத்தன்று சிறுவனை கடத்திய சரஸ்வதியின் உருவம் வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பதிவாகி இருந்தது. இதனை வைத்துதான் தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்து சென்று சிறுவனை மீட்டு கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பும் போலீசார், அவர்களுடன் தொடர்புடைய குழந்தையை கடத்தும் பெண்கள் கும்பல் சென்னையில் பதுங்கி உள்ளார்களா என விசாரித்து வருகிறார்கள். கைதான ஆந்திர பயணிகள் சென்னைக்கு பயணம் செய்த நாட்கள் மற்றும் தேதியை கணக்கிட்டு அந்த நாட்களில் மாயமான குழந்தைகள் விவரத்தையும் சேகரித்து வருகின்றனர். பல்வேறு கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications