இயற்பியல் கஷ்டம்.. உயிரியல் கேள்விகள் ஈஸி.. நீட் தேர்வு எப்படி இருந்தது? மாணவ-மாணவிகள் கருத்து
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கி நடந்தது. தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவ-மாணவிகள் இந்த நீட் தேர்வை எழுதினர். மாலை 5 மணிக்கு தேர்வு முடிவடைந்த நிலையில் நீட் தேர்வு எப்படி இருந்தது? என்பது பற்றி மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டில் தற்போது மருத்துவ படிப்பு பயில வேண்டும் என்றால் நீட் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும். இளநிலை மருத்துவ படிப்பு, முதுநிலை மருத்துவ படிப்பு ஆகியவற்றுக்கு தனித்தனியாக தேர்வு என்பது நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் 2025ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது.
இந்த நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 23 லட்சம் மாணவ, மாணவியரும் தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியரும் நீட் நுழைவுத் தேர்வை எழுதினர். சென்னை, மதுரை, திருச்சி உட்பட மொத்தம் 31 நகரங்களில், நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 40 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தென்காசி, திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மட்டும் நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை.
வழக்கம்போல் கடும் சோதனைக்கு பிறகு மாணவ-மாணவிகள் நீட் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வு என்பது மாலை 5 மணிக்கு முடிவு பெற்றது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த முறை நீட் தேர்வு என்பது கடினமாக இருந்ததாகவும், இந்த முறை இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மாணவ -மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஈரோட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில், ‛‛நான் 2வது முறையாக நீட் தேர்வு எழுதி உள்ளேன். இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது. உயிரியல் பாடத்திட்டம் தொடர்பான கேள்விகள் எளிமையாக இருந்தது. வேதியியல் பாடத்திட்டம் தொடர்பான கேள்விகள் ஓரளவு ஈஸியாக இருந்தது. கடந்த முறையை விட இந்த முறை கடினமாக தான் இருந்தது'' என்றார்.
அதேபோல் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில், ‛‛நான் முதல் முறையாக நீட் தேர்வு எழுதினேன். எனக்கு இயற்பியல் கஷ்டமாக இருந்தது. வேதியியலும் ஓரளவு கடினமாக தான் இருந்தது. உயிரியல் பாடத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. அந்த கேள்விகள் எளிமையாக இருந்தது'' என்றார். அதேபோல் பெரும்பாலான மாணவ-மாணவிகள் இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications