ஒரே நாளில் அடுத்தடுத்து.. இடியாக இறங்கிய பிரஷர்.. திமுகவை சுழன்று வந்த 2 நெருக்கடி.. என்ன நடக்குமோ?
சென்னை: நேற்று ஒரே நாளில் இரண்டு பெரிய நெருக்கடிகள் திமுகவை சூழ்ந்து வந்துள்ளது. இதை வரும் நாட்களில் திமுக எப்படி எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன. . மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, சரத் பவார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த கூட்டணியில் கரம் கோர்த்து உள்ளனர்.

நேற்று இந்த கூட்டணியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின், எம்பி டி ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் சில கசப்பான சம்பவங்கள் திமுகவிற்கு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
நிதிஷ் குமார்: இந்த கூட்டத்தில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முழுக்க முழுக்க இந்தியில் பேசி இருக்கிறார். இதற்கு மொழிபெயர்ப்பு கேட்டதற்கு நிதிஷ் குமார்.. பொழிபெயர்பை நிறுத்த சொன்னதாகவும்.. ஆங்கில - பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து வெளியேறுங்கள். இந்தியில்தான் பேசுவேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கொடுக்க கூடாது என்று வெடுக்கென்று பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசியதாக தெரிகிறது. இந்திய கூட்டணியில் இது பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. கடுமையான மனக்கசப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. இது திமுகவிற்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. இந்திய கூட்டணியில் இனி திமுக என்ன செய்யும்.. திமுகவிற்கான மரியாதை அங்கே கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2வது நெருக்கடி: இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.நாளை பொன்முடி வழக்கில் என்ன தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயசந்திரன் அறிவிப்பார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கு: இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017 ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு தரப்பில், இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட, 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர் பாபு முத்துமீரான் குறிப்பிட்டார்.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அமைச்சர் பொன்முடி மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்வதாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை எனவும் வாதிட்டார்.
பொன்முடி வழக்கு: குறிப்பிட்ட காலக் கட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார். இருதரப்பு வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து நவம்பர் 27ஆம் தேதி வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
தீர்ப்பு என்ன?: இந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். அதில்,
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை வரும் 21- ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
இந்த 2 நெருக்கடிகளை திமுக எப்படி எதிர்கொள்ளும்.. முதல்வர் ஸ்டாலின் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications